'ஓர் எழுத்தாளன், புத்தக வியாபாரியாக மாறும் பரிதாப நிலைமை இன்று இலங்கையில் இருக்கிறது. இதனால் எழுத்தையே வெறுத்து ஒதுங்கிச் சென்ற பல எழுத்தாளர்களை நான் பார்த்திருக்கிறேன். இந்நிலைமை எனக்கு வரக் கூடாதென நினைக்கிறேன்' என்கிறார் எழுத்தாளர் ரிஷான் ஷெரீப்.
கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர் என பல பரிமாணங்களில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வரும் இவர், கேகாலை மாவட்டம் - மாவனெல்லையை பிறப்பிடமாகக் கொண்டவர். பதுரியா மத்திய கல்லூரியில் தமது இளமை கால கல்வியை தொடர்ந்த இவர், மொறட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் படித்துப் பட்டம் பெற்றுள்ளார்.
'வீழ்தலின் நிழல்' (2010), என்ற கவிதை தொகுதியை இவர் வெளியிட்டுள்ளதுடன் இவரது படைப்புகள் இலங்கையின் வீரகேசரி, விடிவெள்ளி ஆகிய பத்திரிகைகளிலும் காலச்சுவடு, உயிர்மை, நவீன விருட்சம், காற்றுவெளி, திண்ணை,
வடக்குவாசல் போன்ற இந்திய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.
இதைத்தவிர இவர், யூத் விகடன் இணைய இதழில் 'உனக்கென மட்டும்' எனும் தலைப்பில் 50 வாரங்கள் ஒரு கவிதைத் தொடரையும்;, 'இருப்புக்கு மீள்தல்' எனும் தொடரையும் எழுதியுள்ளார். கீற்று வார இதழில் 'நேசத்துக்குரிய ஒரே காதலுக்கு' எனும் தலைப்பில் 30 வாரங்கள் ஒரு கவிதை தொடரை எழுதியுள்ளார்.
இவர் தமிழ்மிரரின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதியில் வாசகர்களுக்காக பகிர்ந்துகொண்டவை...