Showing posts with label தேடு. Show all posts
Showing posts with label தேடு. Show all posts

Tuesday, December 28, 2010

"தேடுவதைத் தேடி தளராமல் நிற்கையிலே," இலிங்க பயிரவி (கலித்தாழிசை) by இராஜ. தியாகராஜன்

தேடுவதைத் தேடி தளராமல் நிற்கையிலே,
ஆடுகின்ற மெய்யை அலுங்காமல் பற்றிடத்தான்
நாடுகின்ற நம்முளமும் நாகமுக நாயகியைக்
கூடிமன மீதென்று கொள்வதுவும் நேர்ந்திடுமே!
.....குறைவிலாக் கோமகளைக் கொள்வதுவும் நேர்ந்திடுமே!

வித்தகியின் ’பாசத்தில்’ உயிர்க்கருவை ஆட்டிவைக்கும்
சித்துகளும் சீரழிக்கத் தேன்சொரியும் சிந்தனையும்
அத்தனை ஆயிரமாய் ஆட்டங்கள் மோதுகையில்;
மத்தியிலச் சக்தி மனங்குளிர்ந்து தந்தனளோ?
.....மாநிலமே போற்ற மனங்குளிர்ந்து தந்தனளோ?

உயிர்ப்பளிக் குண்மை உறுதியுடன் சொல்வேன்;
பயிர்வளரப் பாரில் பரிந்துபடி யளப்பாள்;
தயிருள்ளே மோரும் தரமான வெண்ணெய்
இயல்பழகில் வைத்திட்ட இலிங்க பயிரவியே!
.....எழிலாம் வடிவே இலிங்க பயிரவியே!

                                                                               இராஜ. தியாகராஜன்  
(இணையச் சகோதரி பாவலர் திருமதி ஜெயப் ப்ரபா அவர்களின்  இலிங்க பயிரவி புதுப்பாட்டுக்கு மறுபாட்டாய் நான் வனைந்த கலித்தாழிசை--  இராஜ. தியாகராஜன் )