“மக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கும் தொழில் பத்தாயிரம் கோடி ரூபாய் வருமானம் தரும் தொழில் எனக் கேள்விப்படுகிறேன். பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் இதில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கின்றன, தண்ணீர் சேமிப்புதான் நாம் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்சினை. 2025ம் ஆண்டில் தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கும் தொழில் பெட்ரோலிய நிறுவனங்களைப் போல (கோடிகளில் புரளும்) ஆகிவிட்டால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை ”
- இளைஞர்களிடம் உரையாற்றும் போது டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (ஜூலை 17, 2010)
“வாரத்துக்கு சராசரியாக ஐந்து கேன் வாங்குகிறோம். குடிப்பதற்கும், சமைப்பதற்கும் கேன் தண்ணீர்தான்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த குடும்பத்தலைவி தேவிகண்ணன். இரண்டு குழந்தைகள், கணவன், மனைவி என்று நாலு பேர் கொண்ட குடும்பம். ஒரு கேன் தண்ணீர் இருபத்தி ஐந்து ரூபாயிலிருந்து, முப்பத்தி ஐந்து ரூபாய் வரை சென்னையில் விற்கிறது. எனவே ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் பட்ஜெட்டில் வாரத்துக்கு குறைந்தபட்சம் நூற்றி இருபத்தைந்து ரூபாயாவது குடிநீருக்காக மட்டுமே செலவழிக்கப்படுகிறது. மாதத்துக்கு ஐநூறு ரூபாய். வருடத்துக்கு ஆறாயிரம் ரூபாய்.
