Showing posts with label கற்றவை. Show all posts
Showing posts with label கற்றவை. Show all posts

Tuesday, January 1, 2013

எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்


 'எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்' என்ற தலைப்பு வைத்தவுடன் உங்கள் புருவங்கள் ஆச்சரியத்தில் விரியலாம். எழுத்துத் துறையில் பழுத்த அனுபவமுள்ளவர்கள் ஒய்வுபெற போகும் போது தனது அனுபவக் குறிப்புகள் இளைய தலைமுறைக்கு பயன்பட வேண்டும் எனும் நோக்கில் 'கற்றுக் கொள்ளுங்கள்' என்று பெரும்புத்தகம் எழுதுவது நடைமுறை.

நான் இந்த தொடரை ஏன் எழுதுகிறேன்? எனில், எப்படி எழுதுவது என்று கற்றுக் கொண்டு இருக்கிறேன். ஒரு விடயத்தை கற்றுக் கொள்ளும் போது, அதை கற்றுக் கொண்டே பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் போது இன்னும் ஆழமாக எனது மனதில் பதியும். படிப்பதை எழுதும் போது அதுவும் நல்ல பலனை கொடுக்கும்.என்னைப் போல் இணையத்தில் எழுத ஆரம்பித்திருக்கிற நண்பர்களுக்கும் பயன்படலாம்.

ஒலைச் சுவடியின் மீது எழுத்தாணியால் கீறத் தெரிந்தவர்களெல்லாம் ‘வலையேற்றம்’ செய்யும் வாய்ப்பு அன்று இல்லை, இன்று இருக்கிறது. ஒரு கணினியும் இணையவசதியும் இருந்தால் போதும் யார் வேண்டுமானலும் எழுதலாம் என்ற நிலை இருக்கிறது. முன்னொரு காலத்தில் அருந்ததி ராயும்,ஜூம்பாலகரியும் சொந்தமாய்க் கணினி வாங்கி அதில் எந்தத் திட்டமுமில்லாமல் தட்டத் தொடங்கினார்களாம். பிறகு தட்டியவைகளைச் சேர்த்துக் கட்டிபோது அது நாவலாகி விட்டதாம்.புக்கர் பரிசும் பெற்று விட்டதாம். எல்லாம் அவர்கள் சொன்னது தான்.

கையேழுத்து பத்திரிக்கை,உருட்டச்சு பத்திரிக்கை,சிறுபத்திரிக்கை அப்புறம் குமுதம்,குங்குமம்,ஆனந்தவிகடன் என்று படிப்படியாக ‘உழைத்து முன்னேறிய’ எழுத்தாளர் பெருமக்கள் பார்த்துப் பெருமூச்செறியும் வகையில் இன்று இணையத்தில் புதிதாக எழுதக் கூடியவர்கள் சிறப்பான படைப்புகளை எவ்வித பின்புலம் இல்லாமல் கொடுத்து விடுகிறார்கள்.

அதே சமயத்தில் என்ன எழுவது? எப்படி எழுவது? இணையம் எனும் பொதுவெளியில் பொறுப்போடு நடந்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையற்று எதையாவது கிறுக்குபவர்களும் இருக்கிறார்கள். ஆயிரம் பேர் ஆடுவதற்கு இடமளிக்கும் மேடை ஆயிரம் பேரையும் நடனக் கலைஞராக்கி விடுவதில்லை.தலைவர்கள் அடிமட்டத் தொண்டன்,மேதைகள்,பாமரர்கள் என்று  பிரிந்து கிடக்கும் அவமானமான நிலை முடிவுக்கு வருவதை இணையம் சாத்தியமாக்கியிருக்கிறது. ஆனால் அது அந்த சாத்தியத்தை மட்டுமே வழங்குகிறது.

சரி பாடத்திற்கு போவோமா?
    நோக்கம்
    பிரச்சினைகள்
    எழுவதின் செயல்முறைகள்
    திட்டமிடல் (Planning)
    முதல் பிரதியை எழுதுதல் (Drafting)
    மீள் பரிசீலனை செய்தல் (Revising)
    எழுதியதை சரிபார்த்தல் (Proof Reading)
    எழுத்தாளரின் பிரச்சனைகள் (Writer Block)
    உதவிக் குறிப்புகள்