மேடை என்று ஏறிவிட்டால் அங்கே சொல்வது எது என்பதைவிட எப்படிச் சொல்லப்படுகிறது என்பதே முன்னின்று விடுகிறது. புலன்கள் ஐந்து. கண்களால் எழுத்துக்களை வாசிக்கிறோம், அது ஒரு சுகம். நாவால் எழுத்துக்களை உச்சரிக்கிறோம் அது ஒரு சுகம், செவியால் சொல்வதைக் கேட்கிறோம் அதுதான் பெருஞ்சுகம்.
மொழி கூடுகட்டிக் குடியிருப்பது நூல்களில் என்று நாம் தவறாக நினைத்திருகிறோம். அது கூடுகட்டிக் குடியிருப்பதெல்லாம் செவிப்புலன்களில் மட்டும்தான். செவி கேட்கும்போது தொடுபுலன்கூடச் சிலிர்க்கின்றது. நாசிக்குள்ளும் வாசனை என்றால் அந்தக் கற்பனையும் நன்றாகத்தான் இருக்கிறது.
ஒரு குழந்தை ஆயிரந்தான் கண்களுக்கு விருந்து வைத்தாலும் முதன் முதலில் அம்மா என்று அழைக்கும்போது பெறும் இன்பத்தைப் பிறகு எப்போதும் பெறவே முடியாது. பேசு பேசு என்று தவமிருக்காத காதல் இருக்க முடியாது. மரணப்படுக்கையும் செவிப்புலனால்தான் உயிரைப் பற்றிப் பிடித்துக் கிடக்கிறது.