சிறைக்கம்பிகளுக்கு பின்னால் அவரது கால் நூற்றாண்டுக்கும் மேலான வாழ்க்கை கழிந்தது. வெளியில் வந்ததுமே அவர் முதலில் பார்க்க விரும்பிய நாடு இந்தியா. சிறைவாழ்க்கை முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே இந்தியாவுக்கு வந்தார். ஏனெனில் இது காந்தி பிறந்த தேசம்.
ரோலிஹ்லஹ்லா மண்டேலா ஜூலை 18, 1918ல் பிறந்தார். தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்கி பிராந்தியத்தில் ம்பாஸே நதி வளப்பத்திய பகுதியில் ம்வெஸோ என்கிற குக்கிராமம். பழங்குடியின பரம்பரை. ‘ரோலிஹ்லஹ்லா’ என்கிற சொல்லுக்கு க்ஸோஸா மொழியில் ‘கிளையை பிடித்து இழுப்பது’ என்று பொருளாம். ஆனால் பொதுவாக இச்சொல்லுக்கு அர்த்தமாகச் சொல்லுவது ‘பிரச்சினையை உருவாக்குபவன்’.
மண்டேலாவின் தந்தை ஒரு பழங்குடியினத் தலைவர். அங்கிருந்த பல்வேறு பழங்குடி இனத்தவரையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பில் இருந்தார். வெள்ளையரின் காலனி ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு, மண்டேலாவின் தந்தை தன்னுடைய அந்தஸ்தினை இழந்தார். உள்ளூர் மாஜிஸ்ட்ரேட்தான் எல்லாருக்கும் தலைவர் ஆனார். இதனால் குழந்தையாக இருந்த மண்டேலாவை தூக்கிக்கொண்டு அவரது பெற்றோர் இடம்பெயர வேண்டியதானது.