Wednesday, July 20, 2016
நாணமில்லையோ .... நாணயமே ....!
தேடும்போது தூரத்தில் நின்று
ஏமாற்றம் காட்டுவாய்
தேவை இல்லாதபோது
பையவந்து பம்மாத்து காட்டுவாய்
உறக்கத்தை உருக்குலைத்து
உள்ளத்தை உடைத்துவிட எத்தனிப்பாய்
அதிருப்தியை ஏத்திவிட்டு
ஆசைகளை அதிகரிப்பாய்
கண்டதை எல்லாம் கொண்டுவிட
வித்தைகள் காட்டுவாய்
உழைப்பிற்கேற்ற ஊதியம் தராமல்
உணர்வுகளை வேதனிப்பாய்
தோல்விகளுள் துவழவைத்து
வெற்றியை வெகுதுலைவில் வைப்பாய்
இப்பூவுலகில் பொருள் என்றால்
என்னவென்று புரியவைத்து
இரக்கத்தை புறக்கணிக்க பணித்திடுவாய்
புறமதிப்பு மாறாது
அகமதிப்பை மாற்றி மாற்றியே
உருண்டோடுவாய்
நாணயமாய் நாணயமற்றோரிடம்
நாட்கணக்கில் தங்குவாய்
நாணமில்லையோ?
நாணயமென பெயர்கொண்டு
மீன் விற்றாலும் நாறாத
பணமே .......!
கோடானுகோடி மக்கள்
உனைநாடியே நலிந்திருக்க
கண்டைனர் லாரிகளில்
அனாதையாய் ரோட்டோரம் கிடக்கிறாய்
சொந்தம் கொண்டாடுவோர் இல்லாமலே !
ராஜா வாவுபிள்ளை

No comments:
Post a Comment