Monday, June 18, 2012

குழந்தைகளைப் பாதுகாப்போம் !


ஒரு காலத்தில் ஒரு டஜன் பிள்ளைகளைப் பெற்று ஒரு கவலையும் இல்லாமல் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஒன்றோ இரண்டோ குழந்தைகளை வைத்துக் கொண்டு நமது பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது ! காரணம் சமூகத்தில் நிலவுகின்ற அச்சுறுத்தும் நிகழ்வுகள்.

“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்பதெல்லாம் பழைய மொழிகளாகிவிட்டன. இன்று பிள்ளைகளெல்லாம் கிரில் கேட்டுகளுக்கு உள்ளே கிரிமினல்களைப் போல அடைபட்டுக் கிடக்க வேண்டிய சூழல்.

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக நிகழும் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தகைய அச்சுறுத்தல்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க பெற்றோர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது ! குழந்தைகளின் உடல் நலம் குறித்த பாதுகாப்பு உணர்வுகள் இன்னொரு பக்கம் பெற்றோர் முன்னால் வந்து நிற்கின்றன.

வீட்டுக்கு உள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும் குழந்தைகளுக்கு ஆபத்துகள் காத்திருக்கின்றன. அது  மனிதர்கள், விலங்குகள், அஃறிணைகள் என எந்த வடிவத்திலும் வரலாம் ! குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ?



 வீட்டுக்கு வெளியே…

 


வெளியே போகும் முன்…

குழந்தைகளுடன் வெளியே போகிறீர்களா ? ஒரு நிமிடம் நில்லுங்கள். அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்பதே நமது விருப்பம். திருடர்களும், அசம்பாவிதங்களும் நம்மிடம் சொல்லிக் கொண்டு வருவதில்லை. எனவே வீட்டை விட்டுக் கிளம்பும் போதே உங்கள் குழந்தைகளிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.

வீட்டை விட்டுக் கிளம்பும் போது, உங்கள் மொபைல் கேமராவை எடுத்து உங்கள் குழந்தைகளைப் போட்டோ எடுங்கள். ஒருவேளை உங்கள் குழந்தை எங்கேனும் தவறிப் போனால் கண்டுபிடிக்க பேருதவியாய் இருக்கும். “ஒரு மாதிரி பிங்க் கலந்த வயலெட் கலர்ல ஒரு பிராக் மாதிரி கவுன்.. “ என்றெல்லாம் பதட்டத்தில் உளறுவதை இந்த படம் தடுக்கும்.

படத்தைக் காமித்து “இதான் குழந்தை… “ என விசாரிக்க உதவியாய் இருக்கும். தொழில் நுட்பம் இன்றைக்கு வெகுவாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அவற்றை குழந்தைகள் பாதுகாப்புக்காய் பயன்படுத்துவதற்கு இது ஒரு சின்ன உதாரணம் !

அதே போல ஒரு வேளை தவறினால் எந்த இடத்தில் சந்தித்துக் கொள்வது ? என்பதைச் சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக பெரிய பார்க்கள், விழாக்கள், ஷாப்பிங் மால்களில் இது உதவும்.

ஒருவேளை தவறினால் உதவி கேட்பது யாரிடம் என்பதைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். உதாரணமாக காவலரிடம் உதவி கேட்கவேண்டுமெனில், உடையை மட்டும் சொல்லாமல் “பேட்ஜ்” அணிந்திருப்பார், இந்த “லோகோ” உடையில் இருக்கும் என்பன போன்ற விஷயங்களையும் சேர்த்தே சொல்லிக் கொடுங்கள் !

எங்கே இருக்காங்க குழந்தைகள் ?

உங்க குழந்தைங்க விளையாடப் போவதிலோ, நண்பர்களுடன் வெளியே போவதிலோ தவறில்லை. ஆனால் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் ? யாருடன் இருக்கிறார்கள் போன்ற விஷயங்களையெல்லாம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்

உதாரணமாக, “படத்துக்கு போறேன்” என்று உங்கள் பையன் சொன்னால், யாருடன் செல்கிறான். எங்கே செல்கிறான். எப்போ காட்சி துவங்கும், எப்போ முடியும் என அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

“வெளியே போறேன்னு சொன்னான், எங்கே போனான், யார் கூட போனான்னு தெரியலையே” என புலம்பும் நிலையை வைத்துக் கொள்ளாதீர்கள். பக்கத்து தெருவுக்குப் போனால் கூட சொல்லி விட்டுப் போகும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.

கொஞ்சம் பெரிய பிள்ளைகளெனில் அவர்களுடன் செல் போன் தொடர்பில் இருங்கள். அவர்கள் பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாய் தோன்றினால் கவனத்தை அதிகப்படுத்துங்கள்.


கடைவீதிகளில்..

கடைவீதிக்குப் போகும் போது குழந்தையைக் கூட்டிக் கொண்டு போனால் முதல் கவனம் குழந்தையின் மீது இருக்கட்டும். அழகான புடவையைப் பார்த்து குழந்தையை விட்டு விடாதீர்கள். பெற்றோரின் கவனம் சிதறும் நேரம் பார்த்து குழந்தையை யாரேனும் கடத்தில் செல்லும் வாய்ப்பு உண்டு.

யாரேனும் உங்கள் குழந்தையை உற்றுக் கவனிப்பதாய் தோன்றினால், அவர்களிடம் போய் சும்மா பேசுங்கள். முடிந்தால் உங்கள் செல்போன் கேமராவில் அவரை படம் எடுங்கள். நீங்கள் அவரைக் கவனித்தீர்கள், அவருடன் பேசினீர்கள் என்றாலே ‘அடையாளம் தெரிந்து விட்டது’ என அந்த நபர் விலகி விடுவார்.

“குழந்தை ரொம்ப கியூட் அதான் பாத்தேன்” என யாரேனும் சொன்னால், “நன்றி” என ஸ்நேகமாய் ஒரு புன்னகையைக் கொடுத்து விட்டு நடையைக் கட்டுங்கள். அவருடன் அமர்ந்து உங்கள் குழந்தையின் சாதனைகளையெல்லாம் பட்டியல் போடவேண்டாம் !

உங்கள் குழந்தையை யாராவது நெருங்குகிறார்கள், பேசுகிறார்களெனில் உடனே அந்த இடத்திற்குச் செல்லுங்கள். அந்த நபரைப் பற்றிய விவரங்களை கேளுங்கள்.


காரில் போகும்போது …

“காரில் ஏறினதும் நீ பண்ண வேண்டிய முதல் வேலை என்ன ?”

“சீட் பெல்ட் போடறது மம்மி…”

நாலு நாள் இந்த உரையாடல் நீங்கள் காரில் ஏறியதும் நடந்தால், ஐந்தாவது நாளில் இருந்து குழந்தை தானாகவே சீட் பெல்ட் போடப் பழகிவிடும். அப்புறம் ஒருவேளை நீங்கள் சீட் பெல்ட் போடாவிட்டால் உங்களிடம் அதே கேள்வியை குழந்தையே கேட்கும் !

சீட் பெல்ட் போடுவது கார் பயணத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அது பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குப் போனாலும் சரி, தூரத்தில் இருக்கும் சொந்த ஊருக்குப் போனாலும் சரி. அலட்சியம் வேண்டாம்.

என்னதான் காரில் ஏர்பேக் போன்ற வசதிகள் இருந்தாலும் சீட் பெல்ட் போடாமல் பயணித்தால் பாதிப்பு பயங்கரமாக இருக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். குழந்தை மீது அக்கறை இருக்கிறதா, சீட் பெல்ட் போடப் பழக்குங்கள்.



குழந்தையோடு பேசுகிறீர்களா ?

உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்கு முதல் தேவை என்ன தெரியுமா ? உங்களிடம் உங்கள் குழந்தை பாதுகாப்பை உணர்வது தான். “என்ன பிரச்சினைன்னாலும் அம்மா பாத்துப்பாங்க, அப்பா பாத்துப்பாங்க” எனும் ஆழமான நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

அதுக்கு முதல் தேவை குழந்தைங்க கூட போதுமான அளவு நேரம் செலவிடறது ! குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்கு ? அவர்களுடைய நாள் எப்படிப் போச்சு ? அவர்கள் என்ன பண்ணினாங்க ? போன்ற எல்லா விஷயங்களையும் அன்புடன் கேட்டறியுங்கள். அவர்களுக்கு ஒரு நல்ல ஆறுதல் தோளாக இருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பதின் வயதுப் பிள்ளைகளிடமெல்லாம் அதிக நேரம் உரையாடலில் செலவிடுங்கள். அவர்களுடைய வழிகளைச் செம்மைப் படுத்தவும், அச்சுறுத்தல்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும் உங்கள் உரையாடல் உதவ வேண்டும். அவர்களுடைய பயங்கள், கவலைகள் எல்லாம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.

“ஐயோ இதெல்லாம் நான் எப்படி அம்மா கிட்டே சொல்வது” என குழந்தை நினைக்கக் கூடாது. “எதுவா இருந்தாலும் மம்மி கிட்டே சொல்வேன்” என குழந்தை நினைக்குமளவுக்கு இயல்பாகப் பழகுங்கள்.

பள்ளி செல்லும் போது !…

பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகள் நடந்து போகிறதென வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு சிறிது நாட்கள் நீங்களும் கூடவே நடந்து செல்லுங்கள். சாலையில் எப்படி நடப்பது, எங்கெங்கே கவனமாக இருப்பது போன்ற விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள். எந்த இடம் பாதுகாப்பானது, யாரிடம் உதவி கேட்கலாம் போன்ற விஷயங்களையும் அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

ஒருவேளை பொது வாகனங்களில் பயணிக்கும் குழந்தையெனில் பஸ் ஸ்டான்ட் க்கு போய் குழந்தைக்கு எந்த பஸ், எங்கே ஏறுவது, எங்கே இறங்குவது, எப்படி ஏறி இறங்குவது போன்ற விஷயங்களை பழக்குங்கள். பஸ்பயணத்தில் அச்சுறுத்தலெனில் ஓட்டுநரை அணுக குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள்.

பயணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாதுகாப்பு விஷயங்கள் என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் போன்றவையெல்லாம் குழந்தைகள் அறிந்து வைத்திருப்பது அவசியமானது !

தெரியாத நபர் “லிஃப்ட்” கொடுத்தால் மறுக்கப் பழக்குங்கள். ஒவ்வொரு முறையும் உங்களிடம் அனுமதி வாங்கச் சொல்லுங்கள் !

குழந்தைகள் பயணிக்கையில் எப்போதும் ஒன்றிரண்டு பேராய் நடப்பது, பஸ்ஸில் பயணிப்பது பாதுகாப்பானது. தனியே எங்கே செல்வதாக இருந்தாலும் உங்களுக்குத் தகவல் தெரிய வேண்டும் என்பது பால பாடம்.

வாகனங்கள் எச்சரிக்கை !

வாகனங்கள் குழந்தைகளின் மிகப்பெரிய எதிரிகள். அதுவும் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் பத்து மடங்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இரண்டு விதமான ஆபத்துகள் வாகன விஷயத்தில் உண்டு.

ஒன்று விபத்து. நிறுத்தப் பட்டிருக்கும் வாகனங்களின் பின்னாலோ, பக்கவாட்டிலோ குழந்தைகள் போகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக வாகன டயரின் அருகே நின்று பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் வரும் சாலையில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.

இரண்டாவது கடத்தல் ! குழந்தைகள் கடத்துபவர்கள் வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளை வசீகரிக்கும் விதமாக சாக்லேட், பொம்மை போன்ற ஏதாவது பொருளைக் காட்டி அவர்கள் காரின் அருகே வந்ததும் சுருட்டிக் கொண்டு பறந்து விடுவது அவர்களுடைய பாப்புலர் திட்டம்.

தெரியாத நபர் இருக்கும் காரின் அருகே எக்காரணம் கொண்டும் போகவேண்டாம் என குழந்தைகளைப் பழக்குங்கள் !

போன் நம்பர் தெரியுமா ?

உங்க போன் நம்பர் உங்க குழந்தைக்குத் தெரியுமா ? தெரியாவிட்டால் முதலில் அதைச் சொல்லிக் கொடுங்கள். குட்டிப் பிள்ளைகள் கூட ஒரு போன் நம்பரை எளிதில் கற்றுக் கொள்வார்கள். பள்ளி செல்லத் துவங்கிவிட்டால், வீட்டு விலாசத்தையும் கூடவே சொல்லிக் கொடுங்கள்.

பலரும் செய்யும் தப்புகளில் ஒன்று தங்கள் முழுப் பெயரைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்காதது தான். உன்னோட அப்பா பேரென்ன என கேட்டால் “ராஜூ” என்று குழந்தை சொல்வதை விட “சுப்ரமணிய ராஜூ” என சொல்வது அதிக பயன் தரும். அப்பா, அம்மாவின் முழுப் பெயரை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சில முக்கிய அடையாளங்களையும் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். அவ்வப்போது வீட்டில் விளையாட்டாக குழந்தையிடம் திருடன் போலீஸ் விளையாட்டை விளையாடி போன் நம்பர், விலாசம் எல்லாம் கேட்டு பழக்கப்படுத்துங்கள்.

விளையாட்டாய் பழகும் விஷயங்கள் குழந்தையின் மனதில் எளிதில் பதியும் என்பது குழந்தை உளவியல் !

கையில் நம்பர்

குழந்தைகளின் கையில் போன் நம்பரை எளிதில் அழியாத பேனாவைக் கொண்டு எழுதி வைக்கலாம். வெளியிடங்களில் ஒருவேளை குழந்தை தவறிப் போனால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் என்பது சிலருடைய கருத்து. குறிப்பாக பேசத் தெரியாத குழந்தைகள் விஷயத்தில் இது ரொம்ப பயன் தரும். ஒரு வேளை குழந்தை பதட்டத்தில் எண்ணை மறந்து விட்டால் கூட இது உதவும் !

வெளியூரில் போய் ஏதாவது ஹோட்டலில் தங்குகிறீர்களெனில் அந்த ஹோட்டலின் பிஸினஸ் கார்ட்/விசிடிங் கார்ட் நான்கைந்து எடுத்து குழந்தையின் பாக்கெட்களில் போட்டு வைப்பது நல்லது. தவறிப்போனால் ஹோட்டல் பெயரும், தொடர்பு எண்களும் அவர்களிடம் இருக்கும் !

கைகளில் அழகிய அகலமான ரப்பர் பேன்ட் ஒன்றைப் போட்டு அதில் பெயரும் தொலைபேசி எண்ணும் எழுதி வைப்பது கூட நல்ல யோசனையே.

ஷாப்பிங், தீம்பார்க் போன்ற இடங்களுக்குப் போனால், எக்காரணம் கொண்டும் அந்த இடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என சொல்லுங்கள். வெளியே வந்தால் ஆபத்து அதிகமேயன்றி குறைவில்லை ! குழந்தை குட்டிகளுடன் நிற்கும் ஏதேனும் அம்மாக்களிடம் சென்று உதவி கேட்பது ரொம்ப நல்ல விஷயம் என்பதையும் சொல்லிக் கொடுங்கள் !

உடல் நலம் கவனம்

பொது இடங்களுக்குப் போகும் போது குழந்தைகளின் உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். தண்ணீர் விளையாட்டெனில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணி மணிகள் கைவசம் இருக்கட்டும். வெயில் எனில் குடை தொப்பி போன்றவை நிச்சயம் தேவை.

தண்ணீர் எப்போதும் கையில் இருக்கட்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது சுற்றுலா, ஷாப்பிங், பார்க் போன்ற இடங்களில் ரொம்ப அவசியம். உடலில் தண்ணீர் பற்றாக்குறை  நிலை வந்தால் சோர்வும், நோய்களும் வந்து விடும்.

குழந்தைகள் பெரும்பாலும் “தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்பதில்லை. எனவே பெரியவர்கள் தான் அதைக் கவனித்து அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.

நல்ல வசதியான செருப்பை அணிவது அவசியம். சிம்பிளாக காலை உறுத்தாத செருப்புகள் சிறப்பானவை. அதே போல நல்ல வசதியான ஆடைகள் அணிவியுங்கள். ஸ்டைலாக இருப்பதை விட வசதியாக இருப்பதே அதிக மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் என்பது மனதில் இருக்கட்டும் !



 வீட்டுக்கு உள்ளே…

 


குழந்தை தனியாய் இருக்கிறதா ?

வீட்டில் குழந்தையைத் தனியே விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலையெனில் பாதுகாப்பு விஷயங்களில் அதிக கவனம் எடுத்து சொல்லிக் கொடுங்கள்.

முக்கியமாக வீட்டுக் கதவுகளையெல்லாம் பத்திரமாகப் பூட்டி வைக்கச் சொல்லுங்கள். யாரேனும் வந்துக் கதவைத் தட்டினால் என்ன செய்ய வேண்டும் ? தெரியாத நபர் எனில் என்ன செய்ய வேண்டும் போன்றவற்றையெல்லா தெளிவாகச் சொல்லுங்கள்.

வீட்டில் போன் அடித்தால் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக வீட்டில் குழந்தை தனியே இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது ! . “நீங்க யாரு, டாடி கிட்டே என்ன சொல்லணும்..” என கேட்க குழந்தைகளைப் பழக்குங்கள்.

வீட்டுக்குப் போன் செய்து அடிக்கடி விசாரித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்னொரு முக்கியமான விஷயம், வீட்டில் குழந்தைகள் தனியே இருந்தால் அவர்கள் தண்ணீர், மின்சாரம், நெருப்பு போன்ற ஆபத்துகள் கூட நேரலாம். எனவே அது குறித்த பாதுகாப்பு அம்சங்களையும் சொல்லிக் கொடுங்கள் !

பக்கத்து வீடுகள்…

உங்கள் பக்கத்து வீட்டு நபர்களின் வீடுகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். எந்தெந்த வீடுகள் பாதுகாப்பானவை. எவையெல்லாம் உங்கள் குழந்தை நம்பிக்கையுடன் செல்லலாம் என்பதை குழந்தைகளுக்கு விளக்குங்கள்.

தெரியாத வீடுகளுக்கு குழந்தைகள் செல்ல அனுமதிக்க வேண்டாம். தெரிந்த நபர்களின் வீடுகளுக்குக் கூட நீங்கள் கூடவே சென்று பழக்கப் படுத்துவதே நல்லது. நபர்கள் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள் என்பதற்காக வீடு பாதுகாப்பாய் இருக்க வேண்டுமென்பதில்லை. அங்கே கவனிக்கப் படாத கிணறு இருக்கலாம், ஆபத்தான மாடி இருக்கலாம், அல்லது வேறு ஏதேனும் ஆபத்து ஒளிந்திருக்கலாம். எனவே நீங்கள் அந்த வீடுகளைப் பார்த்திருப்பது நல்லது !

பக்கத்து வீடுகளுக்குச் சென்றால் கூட, குழந்தை அந்த வீட்டை அடைந்து விட்டதா என்பதை போனில் விசாரித்து அறியுங்கள். அந்த வீட்டை விட்டுக் கிளம்பும் போதும் உங்களுக்குத் தகவல் சொல்லச் சொல்லுங்கள்.

நெருப்போடு கவனம் தேவை

தீ தொடர்பான ஆபத்துகள் குழந்தைகளுக்கு வருவதை பத்திரிகைகள் அவ்வப்போது துயரத்துடன் பதிவு செய்கின்றன. குழந்தைகளுக்கு நெருப்பு குறித்த ஆபத்துகளும், எச்சரிக்கை உணர்வுகளும் தெரிந்திருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம்.

தீப்பெட்டி, லைட்டர் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒரு வேளை வீட்டில் தீ பிடித்தால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என சொல்லிக் கொடுங்கள். குழந்தைகள் பெரும்பாலும் வீட்டில் எங்கேயாவது ஒளிந்து கொள்ளவே முயலும் என்பது உளவியல் பாடம் !

உடையில் தீ பிடித்தால் ஓடக்கூடாது ! தண்ணீர் ஊற்றவேண்டும், இல்லையேல் தரையில் புரளவேண்டும் ! எரிந்து கொண்டிருக்கும் வீட்டுக்குள் எக்காரணம் கொண்டும் நுழையக் கூடாது, அப்போது மின் உபகரணங்கள் எதையும் தொடக் கூடாது. இப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுன்கள்.

சுவாரஸ்யமாய் சீரியல் பார்த்துக் கொண்டே, “மூணு விசில் வந்துச்சுன்னு நெனைக்கிறேன். பாப்பா அந்த அடுப்பை அணைச்சு வை” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். சிரமம் பார்க்காமல் அத்தகைய வேலைகளை நீங்களே செய்யுங்கள். சமையலறை, கியாஸ் பக்கத்தில் குழந்தைகளை அனுமதிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது !

கொசு, பூச்சி மருந்துகள் !

வீட்டில் கொசு, பூச்சி, கரப்பான் போன்றவையெல்லாம் வராமல் இருப்பதற்காக நீங்கள் வாங்கி அடிப்பீர்களே ஹிட் போன்ற சமாச்சாரங்கள், அவை குழந்தைகளுக்கு ரொம்பவே டேஞ்சர் என்பது தெரியுமா ? பலருக்கும் தெரியாத விஷயங்களில் இதுவும் ஒன்று !

இத்தகைய ஸ்ப்ரேயை குழந்தைகள் தெரியாமல் முகத்தில் அடித்து உள்ளிழுத்தால் அவர்களுடைய மூளை நேரடியாகவே பாதிக்கப்படும். சுய நினைவு இல்லாமல் விழுந்து விடுவார்கள். எவ்வளவு சுவாசிக்கிறார்கள் என்பதற்கு ஏற்ப இந்த பாதிப்பு அதிகமாகும்.

எனவே ஹிட் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளின் கண்களுக்கே எட்டாத இடத்தில் வைத்து விடுங்கள்.  அதே போல பாத்ரூம் கிளீனிங் பொருட்கள், பாத்திரம் கழுவும் பொருட்கள் போன்றவற்றையும் தூரமாகவே வையுங்கள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் கெமிகல் பொருட்கள், நச்சுப் பொருட்கள் போன்ற சர்வ சங்கதிகளும் குழந்தைகளால் எடுக்க முடியாத இடத்தில் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம் !

விளையாட்டுப் பொருட்களில் கவனம்

குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் விளையாட்டுப் பொருட்களிலும் கவனம் தேவை. ரொம்பச் சின்னக் குழந்தைகளுக்கு சின்னச் சின்ன பாகங்கள் உடைய விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கக் கூடாது. குழந்தைகள் அவற்றை வாயில் போட்டு ஆபத்தை விலைக்கு வாங்கி விடலாம். அந்தந்த வயதினருக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்களையே வாங்குங்கள் !

அதே போல தரம் குறைந்த விஷத் தன்மையுடைய பெயிண்டிங், மாலை போன்றவற்றை குழந்தைகளுக்கு வாங்கித் தராதீர்கள். அது அவர்களுக்கு அலர்ஜி போன்ற நோய்களைத் தந்து விடும்.

விளையாட்டுப் பொருட்கள் உடைந்து சுக்கு நூறானபின்னும் அதை ஒரு கோணியில் கட்டி வீட்டிலேயே வைத்திருக்கும் தவறைச் செய்யாதீர்கள். உடைந்த பொம்மைகளையும், விளையாட்டுப் பொருட்களையும் தூரப் போடுங்கள்.

குழந்தைகள் விளையாடும் இடத்தில் கூட அவர்களுக்குக் காயம் தரக்கூடிய கூர்மையான பொருட்கள் இருந்தால் அவற்றை அகற்றிவிடுங்கள். குழந்தைகளுக்கு அருகில் இருக்கும் பொருட்கள் மீதான கவனத்தை விட, விளையாட்டே பிரதானமாய் தெரியும். எனவே அவை ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

மின் உபகரணங்களில் கவனம்

குழந்தைகள் மின் உபகரணங்களைப் பயன்படுத்தும் போது ரொம்பவே கவனம் தேவை. என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக் கூடாது ? என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். அடிக்கடி அவற்றை குழந்தைகளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருங்கள். குறிப்பாக பிளக் பாயின்ட் போன்றவற்றுக்கு ஒரு கவர் வாங்கி  மாட்டுங்கள் !

வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் அவன், ஃபிரிட்ஜ் போன்றவற்றையெல்லாம் குழந்தைகள் கையாள விடாதீர்கள். மின் பொருட்களில் எப்போதுமே ஆபத்து ஒளிந்திருக்கும். எனவே வெகு சில ஆபத்தற்ற மின் உபகரணங்களைத் தவிர வேறு எதையும் குழந்தைகள் தொட அனுமதிக்காதீர்கள்.

மின்சாரத்தில் இருக்கின்ற ஆபத்துகளைக் குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே சொல்லிப் புரிய வைக்கலாம். லைட்டும், சுவிட்சும் விளையாட்டுப் பொருட்களல்ல என்பது அவர்களுக்கு மழலை வயதிலேயே புரிய வேண்டியது அவசியம்.



வீட்டுப் பொருட்களில் கவனம்

நமது வீடு குழந்தைக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டியது நமது கடமை. குறிப்பாக மாடிப் படிகள், பால்கனி, மொட்டை மாடி போன்ற இடங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். பாதுகாப்பு இல்லை என தோன்றினால் கிரில், கதவு, வலை என தேவையானவற்றைப் போட்டு பாதுகாப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

ஷேவிங் செட் போன்றவற்றை பத்திரமாய் வைத்திருப்பது, அயர்ன் பாக்ஸ் போன்றவற்றை பாதுகாப்பாய் வைப்பது, குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்வது என வீட்டுப் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும்.

டிவி, கனமான பொருட்கள், மிக்ஸி, கிரைண்டர் போன்றவை குழந்தை இழுத்துத் தள்ளாத வகையில் இருக்க வேண்டும். ஒரு மேஜை விரிப்பின் முனை கூட கீழே தொங்காமல் இருப்பது நலம். அப்படி இல்லையேல் மேஜை விரிப்பே இல்லாமல் இருப்பது நல்லது !

கத்தி, பிளேடு, அரிவாள் போன்ற விஷயங்களெல்லாம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் ரொம்ப ரொம்ப பாதுகாப்பான இடத்தில் இருக்கட்டும். தவறி விழாத இடத்தில், குழந்தையால் எடுக்க முடியாத இடத்தில் அவற்றை வையுங்கள். மாத்திரைகள், மருந்துகள் போன்ற சமாச்சாரங்களும் டிராக்களில் பூட்டப்பட்டே இருக்கட்டும் !

சின்னச் சின்ன இத்தகைய விஷயங்களில் பெரிய பெரிய ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.



மருந்துகளில் கவனம்

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் விஷயத்தில் பலரும் டாக்டர்களாகி விடுவார்கள்.  அப்படி ஆகாமல் இருப்பது குழந்தைக்கும், நமக்கும் ரொம்ப நல்லது. சரியான நேரத்தில் டாக்டரிடம் போக வேண்டியதும், அவருடைய அறிவுரைப்படி நடக்க வேண்டியதும் ரொம்ப அவசியம். 50% பெற்றோரும் டாக்டர் சொல்வது பாதி புரியாமல் தான் டாக்டரின் அறையை விட்டு வெளியே வருகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. டாக்டர் சொல்வதை முதலில் தெளிவாய் கேளுங்கள்.

“கடைசி நாள்” அதாவது எக்ஸ்பயரி டேட் என்ன என்பதை கவனமாய் பாருங்கள். கவரிலும், பாட்டிலிலும் ஒரே நாள் இருக்கிறதா என்றும் பாருங்கள். பழைய மருந்துகளை வாங்கவே வாங்காதீர்கள். அது பழையதாகி விட்டது என மருந்து கடைக் காரரிடமும் சொல்லி விடுங்கள். காலாவதியான மருந்துகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் !

மருந்தை எவ்வளவு தடவை கொடுக்க வேண்டும், எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் மருத்துவர் அறிவுரைப்படியே கேளுங்கள். அதிக காய்ச்சலா இருக்கு என ரெண்டு மாத்திரை எக்ஸ்ட்ராவாய்க் கொடுக்காதீர்கள். அது ஆபத்தானது !.

“இந்த மருந்து இல்லை, இதே மாதிரி இன்னொரு மருந்து இருக்கு” என கண்ணி வலை விரிக்கும் மருந்து கடைக்காரர்களிடம் ஏமாற வேண்டாம். நிறைய லாபம் பார்க்க விரும்பும் பலரும் சொல்லும் டயலாக் இது ! எந்த மருந்தை டாக்டர் சொல்கிறாரோ அதையே வாங்குங்கள் !

பழைய மருந்துகளை கொடுப்பது, ஒரு குழந்தைக்கு வாங்கிய மருந்தை இன்னொரு குழந்தைக்கும் கொடுப்பது இப்படியெல்லாம் நீங்களே டாக்டராய் மாறி குழந்தையின் வாழ்வோடு விளையாடாதீங்க !



தண்ணீரில் பாதுகாப்பு

தண்ணீர் இன்னொரு டேஞ்சர் விஷயம். குறிப்பாக சின்னப் பிள்ளைகள் உள்ள இடங்களில் தண்ணீர் ரொம்ப ஆபத்து. குழந்தைகளைத் தனியே எக்காரணம் கொண்டும் நீச்சல் குளம், குளம், குட்டை, ஏரி, கடல் போன்ற எந்த இடத்திலும் விடாதீர்கள்.  உங்கள் நேரடிப் பாதுகாப்பு நிச்சயம் தேவை.

வீடுகளிலும் ரொம்ப சின்னப் பிள்ளைகள் இருந்தால் கவனம் இரண்டு மடங்கு வேண்டும். பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தால் குழந்தை அதைத் திறக்க முடியாதபடி வையுங்கள். அல்லது அந்த அறையைப் பூட்டியே வையுங்கள். முடிந்தவரை குடம் போன்ற வாய் குறுகலான பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வையுங்கள்.

குழந்தைகள் தண்ணீரில் விளையாட அதிக ஆர்வம் காட்டும். ஆனால் தவழும் பிள்ளைகளுக்கு ஆபத்தை விளைவிக்க ஒரு பக்கெட் தண்ணீரே போதுமானது. எனவே கவனம் அவசியம்.

இணையத்தில் கவனம்

இப்போதெல்லாம் சின்ன வயதிலேயே சிறுவர் சிறுமியர் இன்டர்நெட் விஷயங்களைக் கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். இணையம் அவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லித் தரும். அதே நேரத்தில் தேவையற்ற பல விஷயங்களையும் அது கற்றுத் தரும். எனவே குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கவனிப்பது, வரையறுப்பதும் பெற்றோரின் கடமையாகும்.

இணையத்தில் சொந்தப் புகைப்படமோ, குடும்பத்தினரின் புகைப்படமோ அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையான தகவல்களை இணையப் பக்கங்களில் போட்டு வைக்க வேண்டாம். எக்காரணம் கொண்டும் இணைய நண்பர்களை தனியே நேரில் சந்திக்க வேண்டாம் எனும் அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

தவறான இணையப் பக்கங்கள், தேவையற்ற சேட் தளங்கள் போன்றவற்றை அனுமதிக்காமல் இருக்கலாம். குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இணையத்துக்கு என ஒதுக்குங்கள். இரவு நேரத்தில் இணையத்தில் உலவுவதை தடை செய்யுங்கள். இப்போதெல்லாம் குழந்தையின் மனசையும், பாதுகாப்பையும் பலவீனப்படுத்துபவை இணையத்திலேயே உண்டு !



பாலியல் தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்க !



நல்ல தொடுதல் எது ?

சின்ன வயதுப் பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று பாலியல் ரீதியான தொந்தரவுகள். இதை “குட் டச், பேட் டச்” என்பார்கள். நல்ல தொடுதல் எது, மோசமான தொடுதல் எது என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது மிக மிக முக்கியம் !

குழந்தைகளைக் கொஞ்சுவது போல தொடுவது, விளையாட்டு எனும் போர்வையில் வக்கிரம் காட்டுவது இவையெல்லாம் எங்கும் நடக்கும் விஷயங்கள். 72.1 சதவீதம் குழந்தைகள் இதைப்பற்றி யாரிடமும் சொல்வதில்லை. காரணம் பல குழந்தைகளுக்கும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இரண்டாவது காரணம், இந்த தொல்லைகளையெல்லாம் தருவது 90% குழந்தைக்குத் தெரிந்த நபர்களே என்கின்றன புள்ளி விவரங்கள்.

வளரும்போ குழந்தைக்கு எல்லாம் புரியும் என்று விட்டு விடுவது ரொம்பவே ஆபத்தானது. ஒரு குழந்தை மூன்று வயதைத் தாண்டினாலே அதனிடம் மோசமான தொடுதல் பற்றிச் சொல்லிக் கொடுக்கலாம் ! மிக முக்கியமாக ஆண், பெண் என இரண்டு குழந்தைகளுக்குமே இதைச் சொல்லிக் கொடுங்கள் ! ஆபத்து இருவருக்குமே உண்டு !

நோ சொல்வது நல்லது !

யாராய் இருந்தாலும் சரி, புடிக்காத விஷயங்களுக்கு “நோ” சொல்லப் பழக்க வேண்டும். குழந்தைகள் நெருங்கிய சொந்தக்காரர்களிடம் “நோ” சொல்லத் தயங்கும். குறிப்பாக கொஞ்சம் வயதில் பெரியவர்களிடம் அவர்களுடைய தயக்கம் அதிகமாக இருக்கும். அதைப் போக்க வேண்டும். தப்பாக யாரேனும் தொட முயற்சி செய்தால் “தொடாதே..” என அழுத்தமாகவும், சத்தமாகவும் சொல்லப் பழக்க வேண்டும். குழந்தை சத்தமாகச் சொன்னால் அதன் பின்னர் அந்த நபரால் தொந்தரவு எற்படும் வாய்ப்பு ரொம்பக் கம்மி !

குழந்தைகளை நம்புங்க !

குழந்தைங்க சொல்வதை பெற்றோர் முழுமையாய் நம்ப வேண்டும். குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள். அதுவும் பாலியல் விஷயங்களில் இட்டுக் கட்டி எதையும் சொல்லவே மாட்டார்கள். எனவே குழந்தைகள் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். குழந்தை பேசி முடிக்கும் வரை இடை மறிக்காதீர்கள். 

“சே..சே.. அந்தத் தாத்தா அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு… “, “அந்த மாமா ரொம்ப நல்லவரு, அவரைப் பற்றி தப்பா நினைக்காதே” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். குழந்தை அசௌகரியமாய் உணரும் நபர்களிடம் குழந்தையை தனியே இருக்க விடாதீர்கள். அது ரொம்ப முக்கியம்.



குழந்தைகளிடம் கேளுங்க !

குழந்தைகள் கிட்டே நடந்த விஷயங்களையெல்லாம் தினமும் கேக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பள்ளியில் நடந்த விஷயங்களானாலும் சரி. சொந்தக்காரங்க வீட்டில் நடந்த விஷயமானாலும் சரி, எல்லாவற்றையும் கேளுங்கள். உங்கள் கள்ளம் கபடமற்ற மழலைகள் உண்மையைச் சொல்வார்கள்.

ஒருவேளை விரும்பத் தகாத நிகழ்வு நடந்திருந்தால் கூட பதட்டத்தை வெளிக்காட்டாமல் பேசுங்கள். எந்தத் தவறுக்கும் உங்கள் குழந்தை காரணமல்ல என்பது நினைவில் இருக்கட்டும்.

நம்பிக்கையை வளருங்க

எதுன்னாலும் மம்மி கிட்டே தயங்காம சொல்லலாம் எனும் நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் குழந்தையோடு இயல்பான அன்பை வைத்திருக்க வேண்டியது தான். எரிச்சல், கோபம் காட்டும் பெற்றோரிடம் குழந்தைகள் உண்மையை மறைக்கும்.

“மம்மி எனக்கு இந்த அங்கிளைப் புடிக்காது” என்று குழந்தை சொன்னால் அரவணைத்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கை உணர்வு கொள்ளுங்கள். ஏதேனும் சிக்கல் நடந்திருக்கலாம். எனவே குழந்தையின் விருப்பத்தை மதியுங்கள். அந்த நபரைக் கொஞ்சம் கவனியுங்கள் !

குழந்தையை மிரட்டினாங்களா ?

“மம்மி கிட்டே சொல்லாதே..” என்று யாராவது எதையாவது சொன்னார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் தப்பான விஷயங்கள் தான் பெற்றோரின் காதுகளுக்குப் போகக் கூடாது என சில்மிஷவாதிகள் நினைப்பார்கள். அத்தகைய விஷயங்களை நீங்கள் நிச்சயம் அறிய வேண்டும். அது தான் உங்களை எச்சரிக்கையாய் வைத்திருக்க உதவும். உங்கள் குழந்தையைப் பாதுகாக்கவும் அது ரொம்ப அவசியம்.

“உன்னைப் பத்தி அம்மா கிட்டே சொல்லி அடி வாங்கி தருவேன்”  போன்ற மிரட்டல்களில் ரொம்ப கவனம் தேவை. தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுகளுக்கு இது காரணமாகிவிடக் கூடும் !

யாராகவும் இருக்கலாம் !

பாலியல் தொந்தரவுகளைத் தருபவர்கள் இளைஞர்களாய் இருப்பார்கள் என்பது ஒரு தப்பான அபிப்பிராயம். வயசு வித்தியாசம், சாதி, மத, பண வித்தியாசம் இல்லாமல் யாருக்குள்ளும் இந்த நரி ஒளிந்திருக்கலாம். எனவே ஆள் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.

குழந்தைக்கு யாராவது கிஃப்ட் வாங்கி குடுத்தாங்களா ? சாக்லேட் வாங்கி குடுத்தாங்களா ? அல்லது ஏதேனும் வாங்கித் தரேன்னு ஆசை காட்டினாங்களா என அறிந்து கொள்ளுங்கள். இவையெல்லாம் சிக்கல்கலுக்கான முன்னுரையாகக் கூட இருக்கலாம்.

குழந்தையின் உடல் மொழி !

குழந்தைக்கு விரும்பத் தகாத சம்பவங்கள் ஏதும் நடந்திருந்தால் குழந்தையின் முகமே சட்டென காட்டிக் கொடுத்துவிடும். அதைக் கவனித்து விசாரிக்க வேண்டியது மட்டுமே பெற்றோர் செய்ய வேண்டிய விஷயம். குழந்தை சோகமாய் இருந்தாலோ, பேசாமல் இருந்தாலோ கவனியுங்க ! குழந்தையின் உடலில் காயம் இருந்தல் உடனே கவனியுங்கள்.

குழந்தைகளை எக்காரணம் கொண்டும் பயமுறுத்தியோ, அதட்டியோ விஷயத்தைக் கேட்காதீர்கள். ரொம்ப ரொம்பப் பொறுமையாய் கேளுங்கள் !

திடீர்ப் பாசம் வருதா ?

குழந்தையிடம் உறவினர்கள் யாராச்சும் திடீரென பாசம் காட்டுகிறார்களா என கவனியுங்கள். குழந்தையை அடிக்கடி கொஞ்சுவது, தனியே மாடிக்கோ, பால்கனிக்கோ, தனிமையான அறைகளுக்கோ கூட்டிப் போவது போன்ற விஷயங்களில் கவனமாய் இருங்கள். குழந்தையைக் கூட்டிக் கொன்டு சினிமா போகிறேன் என்றெல்லாம் சொன்னால் மறுத்து விடுங்கள். பிறர் குழந்தையோடு பழகுவதெல்லாம் உங்கள் பார்வையில் படும் படி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

நோ போட்டோ !

குழந்தையை யாராச்சும் புகைபடம் எடுக்க வந்தால் “வேண்டாம்” என சொல்லப் பழக்குங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் குழந்தையைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டாம். குழந்தையை யாரேனும் ஆபாசமாய்ப் படம் எடுக்கவும் வாய்ப்பு உண்டு.

அதே போல குழந்தையிடம் ஆபாசப் படங்கள் அடங்கிய புத்தகங்கள் யாராச்சும் காட்டுகிறார்களா போன்றவையும் கவனிக்க வேண்டிய விஷயம். குழந்தைகளின் மனதைக் கறையாக்கி அதில் குளிர்காயும் குறை மனசுக்காரர்களும் உண்டு !

கிராமத்திலும் உண்டு !

இதெல்லாம் நகரத்துச் சமாச்சாரங்கள். கிராமத்துல எதுவுமே கிடையாது என தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கிராமங்களோ நகரமோ எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை நிச்சயம் உண்டு.

அதே போல குழந்தை கிட்டே ஒரு தடவை எல்லா எச்சரிகை உணர்வையும் சொல்லியாச்சுன்னும் விட்டுடாதீங்க. அடிக்கடி சொல்லிட்டே இருங்க. குழந்தைகள் மெல்லிய மனசுக்காரர்கள் அவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.



நன்றி : தேவதை, மாத இதழ்.

Source :http://sirippu.wordpress.com/2012/05/18/kids-safety/

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு சார் !

உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !

mohamedali jinnah said...

அன்பு நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு ,
உங்கள் வருகைக்கும் நல்ல ஆலோசனைக்கும் மற்றும் இனிய வாழ்த்துக்கும் மிக்க நன்றி