Tuesday, November 30, 2010

படக்கருவியும் போர் ஆயுதமே!


மாய் மஸ்ரி (Mai Masri)
த்தியக் கிழக்கு என்றழைப்பார்கள் அந்தப் பகுதியை.

உலகப் பிரச்சினைகளின் மையமாக இருப்பதாலும், பெரும்பாலான யுத்தங்களுக்கு கிழக்காக இருப்பதாலும் அவ்விதம் சொல்லப்படுவதும் ஒருவகையில் பொருத்தமே.  அங்கே நாடற்றவர்களின் நாடான பஃலஸ்தீனில்   வயது பேதமின்றி கையில் கிடைத்த ஆயுதங்களை ஆக்ரமிப்பாளர்களுக்கெதிராக ஏந்தியிருக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். அதே நாட்டின்  மாய் மஸ்ரி (Mai Masri) என்கிற பெண்மணி ஏந்தியதோ படக்கருவியை!

மத்தியக் கிழக்கின் ஒவ்வொரு காலநிலையையும் உலகமே உன்னித்துப்பார்க்க இவருடைய ஆவணப்படங்கள் ஜன்னலைப் போல் அமைந்து வந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.
கடந்த 30 ஆண்டுகளாக லெபனானில் இஸ்ரேல் நிகழ்த்திய அத்துமீறல்களை; லெபனானின் உள்நாட்டு யுத்தங்களை; 2000ல் பஃலஸ்தீன் கண்ட ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சியை; - இப்படி ஒன்றையும் விடாமல் ஆவண(ப்பட)மாக்கி வைத்திருந்தாலும், மாய் மஸ்ரியுடைய நோக்கம் யுத்தத்தையும் அதன் இடிபாடுகளையும் படம் பிடிப்பதல்ல;  மாறாக, அக்கட்டத்தில் இருக்கிற (அ) இல்லாமற் போகிற மனிதத்தன்மை, நாளாந்திர வாழ்க்கை, தினசரி இழப்புகள், கவலைகள், தோன்றி மறையும் (அ) மறைந்து தோன்றும் நம்பிக்கைகள் ஆகியவையே இவருடைய கோணம்.

யுத்தத்துடனும், யுத்தத்தின் போதும் அவற்றின் இருமுனைகளில் உள்ள பாமர மக்களின்  அசந்தர்ப்பமான சூழல்களை மாய் வெளிப்படுத்துகிறார். ஓய்வு ஒழிச்சலின்றி தான் காணும் அகதி முகாம்கள், அரசியல் மாற்றங்கள், நம்பிக்கையையும், பயத்தையும் வெளிப்படுத்தும் சின்னஞ்சிறுசுகள், பெண்கள் என்று பதிவு செய்கிற மாய் உடைய வாழ்க்கை மிகுந்த பொறுமையும் அலைக்கழிப்பும் நிரம்பியது.  ஆனாலும் மாய் நம்பிக்கை இழப்பதாக இல்லை.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற படவிழா ஒன்றில், மாய் மஸ்ரியுடையதும், அவர் கணவர் லெபனீய இயக்குநர் ழான் ச்சாமோன் உடையதுமான படங்கள் திரையிடப்பட்டு கெளரவம் அளிக்கப்பட்டன.

“நீண்ட காலமாக ஆக்ரமிப்பில் உள்ள ஊரிலிருந்து வருகிறேன்” என்ற மாய் மேலும் சொன்னார்: “நான் (இப்போது) வாழ்ந்து வருவதும், ஒரு யுத்த பூமியில் (லெபனானில்) தான். அரசியல் படுகொலைகள், உள்நாட்டு கலகங்கள், எழுச்சி முழக்கங்கள் எல்லாம்தான் என் வாழ்வினூடாகக் கண்டு வருகிறேன்”.

மத்தியக் கிழக்கின் சிறந்த ஆவணப்பட இயக்குநராகத் திகழும் மாய் ஃபலஸ்தீனியத் தந்தைக்கும் அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவர்.  1982ல் இஸ்ரேல் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் லெபனானின் ஷாட்டிலா  நகரில் ஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் அரக்கத்தனத்துடன் கொத்துக்கொத்தாய் செய்த கொலைகளை, வன்புணர்வுகளைப் பார்த்திருக்கிறார்.

“அந்த கொடுஞ்சம்பவத்துக்குப் பின்னர் நாங்கள் தெருக்களில் சென்றபோது எங்கும் துயரமும் ஓலமுமாயிருந்தது. வாழ்வின் மிக மோசமான தருணம் அது. எங்கு பார்த்தாலும் மரணத்தின் கோரமுகம். அப்போதுதான், திடீரென்று ஒன்றுமறியா குழந்தைகளின் சிரிப்பொலி கேட்டேன்.  குண்டுகள் துளைத்திருந்த சுவர்களுக்குப் பின்னாலிருந்து  நம்பிக்கைக் கீற்று மிளிர அந்தப் பிஞ்சுகளின் முகங்கள் தெரிந்தன. இறந்து கிடந்தவர்களெல்லாம் வாழத் திரும்பிவிட்டதைப் போன்றிருந்தது எனக்கு! அப்போது தான் படங்கள் எடுப்பதைத் தீர்மானித்தேன்” என்கிறார் மாய்.  “ அதன் மூலம் தான் ஆறுதல் தேடிக்கொள்கிறேன்”

“தொடக்கத்தில் 1980களில் படமெடுப்பது அத்தனை எளிதாக இல்லை. உளவாளிகளையும் (போர்)விமானங்களையும் பார்க்கும் பார்வையினையே படக்கருவிகள் மீதும் மக்கள் வைத்திருந்தார்கள். ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சி நிலையின் போது அந்த அச்சம் அகன்றது. ஒரு புரிந்துணர்வு அரும்பியது”

தன்னுடைய படங்களின் மூலம் வரும் லாபத்தை அகதி முகாம்களிலுள்ள குழந்தைகளின் படிப்புதவித் தொகையாகத் தந்து உதவி வருகிறார் மாய். “குழந்தைகளே மாற்றத்தின் விசை! அவர்கள் தன்னியல்பானவர்கள். சார்பற்றவர்கள், கற்பனாசக்தி நிரம்பியவர்கள்”

ஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞியாக இருந்த காலங்களையும் நினைவு கூர்கிறார் மாய். “படம் எடுப்பவளாக, இப்போது நான் எதிர்கொள்ளும் அபாயங்களும் மிக யதார்த்தமானவை. துப்பாக்கிச்சூடுகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள், அதுவுமில்லாமல் கலவரக்காரர்கள் இவற்றினூடே தான் என் காமிராவும் பயணிக்க வேண்டியிருக்கிறது”

“இந்தக் காமிரா கூட ஓர் ஆயுதம் தான்”  தனது படக்கருவியைச் சுட்டிக்காட்டுகிறார் மாய்.

“என்னிடமில்லாத வலிமையை இதன் மூலமே நான் பெறுகிறேன்” என்கிற மாய் ஒரு ஆவணப்பட இயக்குநராக மாற்று வழிகளையும் யோசித்துவைத்திருக்கிறார்.  தனது சொந்த ஊரான நபுலஸ்ஸுக்கு முதன்முறை மாய் சென்றிருந்தபோது அங்கு ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  பதுங்கிப் பதுங்கி பாதுகாப்பாக படம் பிடித்தேன். சூழலுக்கேற்ப நடந்துகொண்டேன். ஆவணப்படத்துக்கான கதைக்கருவை யோசிக்கத் தேவையேயில்லாமல் அங்கே நிலைமையே அதுவாக இருந்தது”
தனது ஆவணப்பட ஆக்கங்களில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஃபலஸ்தீன் பற்றிய பிம்பத்தையே குறிப்பிடுகிறார் மாய்.  “ பிரிட்டிஷ் ஆட்சி, கடைசியாக இஸ்ரேலின் ஆக்ரமிப்பு என்று காலாகாலத்துக்கும் அது நிழல்தேசமாகவே இருக்கிறது – அநாதரவானவர்களின் பூமியாக; மக்களே இல்லாமல் போகும் தேசமாக!

“ஒவ்வொரு ஃபலஸ்தீனியரிடத்திலும் ஒரு திரைப்படக் கரு இருக்கிறது. அவரவர்க்கு நிகழ்ந்த சம்பவங்களையும், செவியுற்றதையும் ஒவ்வொருவரும் மனதில் திரும்பத்திரும்ப ஓட்டிப்பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்” என்று மாய்-யின் கூற்று தான் எத்தனை உன்னிப்பானது!
விருது பெற்ற மாய் மஸ்ரியுடைய ஆவணப்படங்கள் யாவும் உண்மையின் தேடலாய் அமைந்தவையே. ஆனால் அவை யுத்தம் பற்றியதல்ல. மிக மோசமான சூழலிலும் இளைஞர்களின் கனவுகள், வாழத் தலைப்படும் நம்பிக்கைகள், அன்பின் சிரிப்பு ஆகியவற்றையே அப்படங்கள் பேசுகின்றன.

“யுத்தம் மக்களிடம் அவர்களின் நல்ல பக்கத்தையும், மோசமான தன்மையையும் வெளிக்கொணர்வதாக அமைகிறது”  என்கிற மாய் மஸ்ரியுடைய இந்தப்படங்கள் ஏற்படுத்திய விளைவுகள் ஆச்சரியமானவை. ஒரு ஜப்பானிய இசையமைப்பாளர் இவருடைய படங்களைப் பார்த்துவிட்டு அகதிமுகாம் குழந்தைகளுக்கு இசைக்கருவிகள் அனுப்ப விரும்பினார். இவருடைய “33 நாள்கள்” படம் பார்த்த ஒரு இஸ்ரேல் தம்பதியினர் கண்கலங்கினார்கள். இதே படத்தை ஆம்ஸ்டர்டாமில் பார்த்த இஸ்ரேலிய பெண் இயக்குநர் ஒருவர் பித்துபிடித்தாற் போல மழையில் இரவு முழுக்க அலைந்து திரிந்திருக்கிறார். இப்படம் தந்த உந்துதலில் அதே இயக்குநர் “அர்னாவின் குழந்தைகள்” என்கிற திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இத்தாலியில் ஓர் ஊமைச் சிறுவன் “33 நாள்கள்” படத்தைப் பார்த்துவிட்டுஇ குமுறிப் பேசத் தொடங்கியிருக்கிறான்.
இப்படியாக, தனது போராயுதமான படக்கருவியால் உயிர்களைப் போக்கிடச் செய்யாமல் இதயங்களைத் தட்டி எழுப்புவதை மாய் செய்து வருகிறார் எனும் போது அது பாராட்டப்படவேண்டிய செயலல்லவா!
கட்டுரை: இப்னு ஹம்துன்
Source: http://www.satyamargam.com/1587?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+Satyamargam+%28SatyaMargam.com%29
------------------------------------------------------------------------
.

பாவ மன்னிப்பு

எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.

அல்-குர்ஆன் 2:160சூரத்  அல் -பகராஹ்

அப்துல் நாஸர், மங்களூர்


அல்லாஹ்வின் ஏவல் விலக்குகள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்றவேண்டும். பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் சின்னதும் பெரியதுமாக பெரும் பாவங்களையும் தவறுகளையும் செய்துள்ளோம். இதற்கெல்லாம் இறைவனிடத்தில் நாமெல்லாம் கணக்கு தீர்க்கவேண்டி உள்ளது. மரணமடைவதற்கு முன்னால் கணாக்கு தீர்க்க வேண்டாமா? படைத்த இறைவனிடத்தில் பாவ மன்னிப்பு கேட்க வேண்டாமா?
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன். அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம்
    ஒரு மனிதர் தலையில் கனமான சுமை ஒன்றை நெடுந்தூரம் கொண்டு செல்கிறார் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அந்த கனமான சுமையை அந்த மனிதர் கீழறக்கி வைக்கும் போது அவருக்கு கிடைக்கும் ஆனந்தம், மன சமாதானம், மகிழ்ச்சி இவற்றை வார்த்தைகளால் கூற முடியாது. நம்மைப் படைத்த இறைவனிடத்தில் பாவங்களுக்காக தவறுகளுக்காகப் பாவ மன்னிப்பு கேட்காமல் அலட்சியமாய் இருக்கின்றோம்.
        நாம் வாழ்க்கையில் நம் தவறுகளுக்காக படைத்த இறைவனிடத்தில் திரும்பி கண்ணீர் விட்டு அடிமனதில் இருந்து எழும் கவலையோடு படைத்த இறைவனிடத்தில் பாவமன்னிப்புக் கேட்கிறோமா? இல்லை நாளை மறுமை வாழ்க்கையை எண்ணி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறோமா? இல்லை அந்த கப்ரின் நிலையை எண்ணி கவலைப்பட்டு கண்ணீர் விட்டிருக்கிறோமா?
    ஆனால் நாம் கண்ணீர் விட்டது உண்மையாக எதற்கென்றால் நம் குடும்பத்தில் சகோதரனோ, குடும்பத்தினரோ வெளிநாடு செல்ல வேண்டும். அப்போதுதான் கண்ணீர் விடுவோம்; உள்ளம் குமுறுவோம். ஆனால் நம் பாவங்களுக்காக கண்ணீர் விட்டு உள்ளம் குமுறி இருக்கிறோமா? இன்ஷாஅல்லா இனியாவது கண்ணீர் விட்டுக் கொண்டே பாவமன்னிப்பு கேட்போமா?
    வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் எல்லா நிமிடங்களிலும் தவறு செய்பவர்கள் நாம்; நம்மை அறிந்தோ அறியாமலோ செய்த தவறுக்கு பரிகாரம் என்ன? நம் உடம்பில் தூசியோ சேறோ ஒட்டிக்கொண்டால் உடன் சுத்தப்படுத்துகிறோமே, அதே மாதிரி எந்த நிமிடம் தவறு செய்து விட்டோம் என்ற எண்ணம் நமக்கு வந்து விட்டதோ, அந்த நிமிடமே படைத்த இறைவனிடத்தில் அழுது பாவ மன்னிப்பு கேட்க திரும்பவேண்டும்.
    ஆதம்(அலை) ஹவ்வா(அலை) பாவமன்னிப்பு கோரியதை பாருங்கள்.
    அதற்கு எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்து விட்டோம்; நீ எங்களை மன்னித்து கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தோர்களாகி விடுவோம் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 7:23)
    நபி ஆதம்(அலை), ஹவ்வா(அலை) பாவமன்னிப்பை இரவன் ஏற்றுக்கொண்டான். அவர்களிலிருந்தும் தாம் செய்தது பாவம் என்று தெரிந்ததும், அல்லாஹ் கற்றுத் தந்தபடி பாவமன்னிப்பு கோறினார்கள். அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்தான். (அல்குர்ஆன் 2:37)
     பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளை கற்றுக்கொண்டார் (இன்னும் அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்பு கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)
    இன்னும் சிலர் இது நாள் வரை தொழாமலும் பாவ மன்னிப்பு கேட்காமலும் இருந்து விட்டேன். இப்படியே இருந்து விட்டு போகிறேன் என்று இறைவனிடத்தில் நம்பிக்கையிழந்து விடுவதையும் பார்க்கிறோம். ஆனால் அல்லாஹ் கூறுவதைப் பார்ப்போம்.
    என் அடியாளர்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடைவன் என்று நபியே நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53)
    முச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவமன்னிப்பு கோரலை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: திர்மிதி
    நிச்சயமாக அல்லாஹ் தன் அடியாளர்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன். (அல்குர்ஆன் 9:104)
    அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடாமல் இது நாள் வரை இருந்தவர்கள் இனியாவது அவர்கள் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி திருந்தி வாழ முற்படவேண்டும்.
    எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! (அல்குர்ஆன் 2:286)
Source : http://www.readislam.net/forgive.htm
--------------------------------------------------------------------------------
இஸ்லாத்தில் பாவ மன்னிப்பு உண்டா?
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் முஸ்லிமல்லாத மக்களுக்கான இஸ்லாம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர் P Jainul Abdeen


Sunday, November 28, 2010

மனித நேயம் மாறு பட்டவை









அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று. நீர் கூறும்; "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்."  (சுரத்  அல் -பகராஹ்  (பசு )2:215-அல்-குர்ஆன்)

உதவியும் உபகாரமும் தனது பெற்றோர், மனைவி, மக்களுடன் சுருங்கிவிடாமல் இறைவனது படைப்பினங்கள் அனைத்திலும்   உள்ளடக்கிக் காட்டப்படவேண்டும்.   உதவியும் உபகாரமும் நல்லுறவும் எங்கும் இருந்தால் வாழ்வு மகிழ்வடையும் . 


வறுமை
அண்டைவீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் முஸ்லிம் அல்ல என்கிற நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும். அண்டை வீட்டுக்காரன் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

தான தர்மங்களில் சாதி மதம் பாராமல் ஈகை குணத்தின் சிகரங்களாக, வாரி வழங்கும் வள்ளல்களாக பின்பற்றி வாழ்ந்தால் குரோதங்களும் விரோதங்களும் இருந்த இடம் தெரியாமல் போகும்.

சுத்தம் என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி.
பெரும் செல்வந்தர்கள் என்றாலும் எளிமையான வாழ்க்கை முறையை  தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

Saturday, November 27, 2010

மனம் மகிழுங்கள்! - 24 : நன்னம்பிக்கை

மனம் மகிழுங்கள்!
24 - நன்னம்பிக்கை
- நூருத்தீன்
யானையின் பலம் எதிலே?
தும்பிக்கையிலே!
மனிதனோட பலம் எதிலே?
நம்பிக்கையிலே!

- என்று தமிழ்க் கவிஞரொருவர் எழுதியிருந்தார்.

நம்பிக்கை!

அது நம் ஒவ்வொருவருக்கும் உண்டு; எக்கச்சக்கமாய் உண்டு. மறுப்பவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையோ அல்லது அதற்குள்ளோ தங்களது விரல் நகங்களில் தீட்டப்படும் கறுப்பு மையை உற்றுப் பார்த்துக் கொள்ளலாம். என்றாவது, எப்படியாவது, யாராவது ஓர் ஆட்சியாளர் நீதி, நேர்மையுடன் நம்மை ஆளத்தான் போகிறார் என்று நம்பவில்லை?


தவிர, நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை உண்டு. ஒவ்வொருமுறை ஏதோ காரணம் அமைந்திருந்தாலும் “இந்த முறை கணவன் தன்னை எப்படியும் முதல்முறையாக ப்ஃளைட்டில் ஏற்றி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப் போகிறான்,” என்று ஒரு நடுத்தரவர்க்க மனைவிக்கு நம்பிக்கை. “வரதட்சணையா? அதென்ன கற்கால வழக்கம்? பெண்ணை மட்டும் தாருங்கள்” என்று ஒரு ராஜகுமாரன் குதிரையிலோ, குறைந்தபட்சம் ஓர் ஆட்டோவிலோ வந்து நிற்கப் போகிறான், என்று பெண்ணைப் பெற்றவருக்கு நம்பிக்கை.

எதிர்மறையாய் வேறொரு வித நம்பிக்கையும் உண்டு.

மூட நம்பிக்கை!

தேர்விற்காக விடியவிடியப் படித்து, மாய்ந்து மாய்ந்து தயாராகி, தேர்வுத் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முழுகி, கடைசியில் கப்போர்டிலுள்ள பச்சைக் கலர் பேனாவைக் கண்ணில் ஒற்றி எடுத்துக் கொண்டு “தேர்வை இந்தப் பேனாவில் எழுதினால் நிச்சயம் நான் பாஸ்,” என்று சின்னப்ப தாஸுக்கு ஒரு நம்பிக்கை.

தேடித்தேடி விண்ணப்பித்து, ஆளைப்பிடித்து, கழுதைக் காலைப்பிடித்து ஒருவழியாய் அந்த மல்டிநேஷனல் கம்பெனியில் நேர்முகத் தேர்விற்கு அழைப்பிதழ் வர, படு டென்ஷனுடன் கிளம்பும் மகனிடம், “அந்த நீலநிறக் கர்சீப்பை மறக்காமல் பேண்டிற்குள் வைத்துக்கொள். உனக்கு நீலம்தான் ராசியான கலர்,” என்று மகனுக்கு அறிவுறுத்தும் அம்மாவிற்கு ஒரு நம்பிக்கை.

பூனை குறுக்கே ஓடினால், “ஆஹா! சகுனம் சரியில்லையே!”

கிளம்பும்போது “எங்கே போகிறீர்கள்?” என்று யாராவது கேட்டுவிட்டால், “போகும் காரியம் உருப்பட்டாற் போலத்தான்.”

காக்கை கத்தினால், "விருந்தாளிகள் வரப்போகிறார்கள் பார்" என்று நினைக்க, விருந்தாளிகள் வந்து சேருவார்கள். அடுத்த முறை ஊரிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லும்முன் மெயில், போன், எஸ்.எம்.எஸ்., என்று எதுவும் முயலாமல் நேரடியாய்ச் சென்று இறங்கி, திகைத்து நிற்பவரிடம் “என்ன காக்கை கத்தவில்லையா?” என்று கேட்டுப் பார்க்க வேண்டும்.

எது எப்படியோ, இப்படியான மூடநம்பிக்கைப் பட்டியல் நூறு பக்க நோட்டு அளவிற்கு நீளம்!

மனவியலாளர்கள் இதை மாற்றி வேறுவிதமாகச் சொல்கிறார்கள். உங்கள் மனம் எதை நினைக்கிறதோ – நல்லதோ கெட்டதோ - அதை அடைந்துவிடும் தன்மை கொண்டது!

“எனக்கு ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் தலைவலி வரும்” என்று நினைத்தால் அது உங்களைத் தவறாமல் வந்தடையும். “கூடுதலாய்க் கொஞ்சம் பணம் கிடைத்தாலும் அது எனக்குத் தங்காது,” என்று நினைப்பவர்களுக்குப் பணம் ஏதும் உபரியாய்க் கிடைத்தாலே அது உடனே செலவாகிப் பர்ஸ் காலியாவது நிச்சயம் என்று தலையில் அடித்து “காட் ப்ராமிஸ்பா,” என்கிறார்கள்.

அமெரிக்காவில் கார்ல் சிமன்டண் (Dr. O. Carl Simonton) என்றொரு டாக்டர் இருந்தார். புற்றுநோய் மருத்துவர். தம் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தார். ஒரே அளவிலான கதிர்வீச்சு சிகிச்சை பெறும் நோயாளிகள் மத்தியில் இரு விதமான விளைவுகள் தென்பட்டன. “ஏன்?” என்று அவருக்குள் கேள்வி எழுந்து, அதை நுணுகி ஆராய்ந்தவர் அந்த விஷயத்தைக் கண்டுபிடித்தார். Positive attitude எனப்படும் ஆக்கபூர்வச் சிந்தனையுள்ளவர்களுக்கு மனம் சோர்வடைந்தவர்களைவிடக் குறைவான பக்க விளைவுகளே இருந்தன. “ஆஹா! மனதிற்கும் உடல்நலனிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது,” என்றவர், புற்றுநோயின் முற்றிய நிலையில் இருந்தவர்களுக்குக் கூட மருத்துவத்துடன் சேர்த்து மனப் பயிற்சி அளிக்கும்போது அவர்களது மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் அவர்களது சொச்ச வாழ்நாளுக்கு உற்சாகத்தையும் மனக்கட்டுப்பாட்டுத் தரத்தையும் உயர்த்த முடியும் என்று ஆராய்ந்து நிரூபித்தார்.

தமது ஆராய்ச்சியில் டாக்டர் கார்ல் முக்கியமாய்த் தெரிவித்த தகவல், “நோயாளிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் குணமடையும் வேகம் அமையும்.” அதன் அடிப்படையில் அவர் மருத்துவச் சிகிச்சையும் மனவுறுதி ஆலோசனைகளையும் சேர்த்து அளிக்க ஆரம்பித்தார். சென்ற ஆண்டு இந்த டாக்டர் உணவு உண்ணும்போது புரையேறி இறந்து போனார் என்பது மட்டும் சோகமான உபரித்தகவல்.

வாழ்க்கையில் உங்களது மனம் எதை நம்புகிறதோ அதுவே உங்களுக்கு நிகழும். “என்னை யாரும் கண்டு கொள்வதில்லை; என்னிடம் சரியாகப் பழகுவதில்லை; என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள்,” என்பது உங்கள் மன நம்பிக்கையென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

“எல்லோருக்கும் என்னைப் பிடித்திருக்கிறது; என்னிடம் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்,” என்று நம்புகிறவருக்கு அவர் வாழ்க்கையில் அவ்விதமே நிகழ்கிறது.

உங்கள் மனம் உங்களது கட்டுப்பாட்டில்! எதைச் சிந்தனை செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தாம் முடிவடுக்கிறீர்கள். உங்கள் மனதிற்குள் எதைத் திணிப்பது என்பதையும் நீங்கள்தாம் முடிவெடுத்து நிகழ்த்துகிறீர்கள்.

நல்லதை நம்பி மனதிற்குள் நல்ல எண்ணங்களையே திணித்தால் வாழ்க்கையில் அகமும் முகமும் மகிழ்வுடன் திகழும்.


னம் மகிழ, தொடருவோம்...

Thursday, November 25, 2010

பெண் இல்லாமல் போனால்

பெண் இல்லாமல் போனால் இந்த உலமே இல்லாமல் போகும். ஒவ்வொரு உயிரையும் அவ‌ள்தான் பெற்றெடுக்கிறாள். அவ‌ள‌ன்றி ப‌டைப்பில்லை.

ஒவ்வொரு பிள்ளைக்கும் அவ‌ள்தான் ஊட்டுகிறாள். அவ‌ள‌ன்றி காத்த‌லில்லை. தாயாய் பாலோடு வந்து ஊட்டிய‌வ‌ள் த‌ன்பிள்ளைக்கு என்றென்றும் உண‌வூட்ட‌வே த‌விப்பாள்.

தாயிட‌ம் ஊட்டிக்கொண்ட‌ ஆண் தார‌த்திடமும் ஏங்கி நிற்ப‌து இய‌ல்பு. ஒரு பெண்ணுக்கு எறும்பும் தெருமுனை நாயும்கூட‌ பிள்ளைக‌ளே. உண‌வூட்டி ம‌கிழ்வாள்.

க‌ண‌வ‌னை ம‌ட்டும் சீண்டுவது ஊட‌ல் கொள்ள‌த்தானேய‌ன்றி காத்தலை உத‌றித்த‌ள்ள‌ அல்ல‌.

அத்த‌னையும் இழ‌ந்து ஆண் விதியடியில் வீதிமடியில் கிட‌க்கும்போது அள்ளி அணைத்து அவனுக்கு உயிரூட்ட ஒரு பெண்ணுக்கே இய‌லும்.

ஆக்க‌லும் காத்த‌லுமே பெண். அழித்த‌ல் என்ப‌து தன்னைத்தான் என்ப‌தால் பெண் மேலானவள்.

நன்றிhttp://anbudanbuhari.blogspot.comபெண் இல்லாமல் போனால்

Wednesday, November 24, 2010

பாண்டியர்கள் மட்டும்தான் ஜொள்ளு விடுவார்களா (வணங்காமுடி பதில்கள்)





பிரபஞ்சத்தை உருவாக்க கடவுள் தேவையில்லை என்கிறாரே ஸ்டீபன்ஹாகின்ஸ்? - மருதை குமார், கடலூர்
ஸ்டீபன் ஹாகின்ஸ் தன்பங்குக்கு ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கிவிட்டு சொன்னால் நல்லது.


மெக்சிகோ வளைகுடா எண்ணை கசிவு தற்போதைய கதி என்ன? - கோபால்
அமெரிக்க ராணுவ ரசசியங்கள் விக்கிலீக்ஸ் மூலம் 'கசிந்த' செய்தி வெளியான பிறகு மெக்சிகோ எண்ணைக் கசிவு பழைய செய்தியாகி விட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் மெக்ஸிகோ வளைகுடாவில், எண்ணெய்க் குழாயில் அடைபட்டிருந்த இயற்கை வாயுவினால் எண்ணெய் உறிந்து எடுக்கும் தளம் சேதமடைந்தது. எண்ணெய்க் குழாயிலிருந்து வெளியேறிய மீதேன் வாயு தீப்பற்றியதால் ஏற்பட்ட விபத்தில் 11 ஊழியர்கள் இறந்தனர். எண்ணெய்க் கிணறும் வெடித்ததால் கடலில் எண்ணெய் பரவி விட்டது. இதனால் கடல்வாழ் உயிரினங்களும் தாவரங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டன.கடலோர மக்களும் கடல்சார் தொழில் செய்வோரும் பாதிக்கப்பட்டனர்.அவர்கள் எண்ணெய் நிறுவனமான பி . பி . நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்கள் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கும் உரிமையை விட்டுக் கொடுக்காமல், 20 பில்லியன் அமெரிக்க டாலருக்குக் குறையாமல் இடைக்கால நிவாரணம் பெறுவது என்பதே தற்போதைய நிலை.இடைக்கால நிவாரணம் பெறுவதற்காக சுமார் நான்கு லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது.


தீயணைப்புத் துறையில் பெண்கள் ஏன் பணியாற்றுவதில்லை? -கார்த்திக் - தூத்துக்குடி

இந்தியாவில்தான் இல்லை.

காவல் துறையிலும் இப்போது ராணுவத்திலும் பெண்கள் சேவை செய்வதுபோல் விரைவில் தீயணைப்புத் துறையிலும் பெண்கள் சேவையாற்ற்வர். அது தேவையும் கூட.


மற்ற வாகனங்களைப்போல் நடுக்கடலில் கப்பல்கள் மோதிக் கொண்டு விபத்து ஏற்படுவது கொஞ்சம் ஓவர்தானே? - சந்திரன்'விபத்து' என்பதே எதிர்பாராமல் நடப்பது தானே?

எல்லா விபத்துகளுமே 'ஓவர்'தான். எதுவுமே இயல்பில்லை.

ஒபாமாவின் இந்திய விஜயம் குறித்து வ.மு.வின் கருத்து? - ரவி, அட்லாண்டா
அமெரிக்காவுக்கு லாபம் தேடித்தரும் வணிகப்பயணம் அதன் நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டது.

ஒபாமாவுக்காக, ஒருசிலநாள் நிகழ்ச்சிகளுக்காக, இத்தனை கோடி செலவுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? - ஜான்சன் செபாஸ்டியன்
அமெரிக்காவின் அதிபரின் பாதுகாப்புக்காக அந்நாடு செலவிட்ட தொகையால் நமக்கென்ன இழப்பு?

"சங்கரராமன் கொலைவழக்கில் மேலும் சில சாட்சிகள் பல்டி" எனத் தலைப்பிட்டு செய்தி வருகிறது. சாட்சி, முதலில் சொன்னது அல்லது பின்னர் சொல்வது ஆகிய இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும். அல்லது இரண்டுமே பொய்யாக இருக்க வேண்டும். இது நீதிமன்றத்தில் பணியாற்றும் துப்புறவுத் தொழிலாளிக்கும் தெரியும். இவ்வாறு பிறழ் சாட்சி சொல்பவர்களைக் கடுமையாக தண்டிக்க நம் சட்டத்தில் இடம் உண்டா? - வசீகரன், பட்டுக்கோட்டை

உண்டு.

சாட்சியத்தை மாற்றியதற்காகக் குஜராத் பெஸ்ட்பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஜகீரா ஷேக் குஜராத் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.


காஷ்மீரிகளைக் கொன்று நிலத்திற்காக சண்டை போடுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? - அப்துல் ரஹ்மான்இன்று காஷ்மீரில் நடப்பது நிலத்திற்கான சண்டை இல்லை. காஷ்மீரிகளை அங்கிருந்து விரட்டும் திட்டமும் இந்தியாவிற்கு இல்லை. இந்தியாவின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்டு இந்தியர்களாக வாழ விரும்பாதவர்கள் நடத்தும் போராட்டத்தை அடக்குவதற்காக அங்கு குவிக்கப்பட்டிருக்கும் ராணுவமும் துணை ராணுவப் படைகளும் செய்யும் அட்டூழியங்களை எதிர்க்கும் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

ஒரே மாதிரியான வினாக்களுக்கு விடையளிக்க நேரும்போது என்ன நினைப்பீர்கள் வ.மு ஐயா - சண்முகம், சேத்தியாத்தோப்புபுதிது புதிதாக வாசகர்கள் வருவதால் முன்னர் இதுபோன்ற வினாக்களுக்கு அளித்த விடைகளை அவர்கள் படித்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொள்வதால் அவ்வினாக் களுக்குச் சிறிய விடையளித்து, முன்னர் அளித்துள்ள விடைகள் பற்றியும் குறிப்பிட்டு விடுவேன்.

Tuesday, November 23, 2010

பெண்ணின் வலிமை


வாலியில் இரு கைகளிலும் தண்ணீர் கொண்டுவருவதில் உடலமைப்பில் வசதி ஆணுக்குத்தான். பெண் சிரமப்படுவாள்.

ஆனால் அதுவே இடுப்பில் தூக்குவதென்றால் 100 குடம் தண்ணீர் எடுப்பதென்றாலும் மிக எளிதாகச் செய்து முடிப்பாள்.

ஆண்களால் இடுப்பில் குடம் சுமக்க முடியாது. அவர்களின் இடுப்பெலும்பு அதற்கு ஏற்றதல்ல. பெண்களின் இடுப்பெலும்பு விரிந்தது, எனவேதான் அவர்கள் எளிதாய் இடுப்பில் குடங்களையும் குழந்தைகளையும் சுமக்கிறார்கள்.

அதே போல் குழந்தையை தோளின் மீது தூக்கிக் கொண்டு செல்வது ஆணுக்கு எளிது. பெண்களின் தோள்கள் சிறியன. கொஞ்சம் வளைந்தும் இருக்கும் என்பதால் இது பெண்ணுக்கு சிரமமான காரியம்.

வலி ஏற்பதில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள். ஆனால் ஒரு வித்தியாசம். பெண் மன வலியைப் பொறுப்பாள். அத்தனையையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருப்பாள். ஆண் உடல் வலியைப் பொறுப்பான். பெண் அதைப்பார்த்து பதறிப்போவாள்.

ஆனால் பெண் பொறுக்கும் உடல் வலிகள் மகத்தானவை. பிரசவம், மாதவிடாய் போன்ற இனப்பெருக்க வேதனைகள் அவளுக்குண்டு. அதாவது அதைக்கொண்டே இந்த உலகம் உய்க்கும். அதை இறைவன் அவளுக்குத் தந்திருக்கிறான்.

அதே போல ஆண் சுகக்கும் மன வலிகளும் மகத்தானவை. அது உத்தியோகம், குடும்பம் காக்கும் பொறுப்பு, பிள்ளைகள் வளர்ப்புக்கும் படிப்புக்கும் அவர்களின் திருமணத்திற்கும் தேவையான பொருள் ஈட்டுதல். குடும்பத்தின் பொருளாதார கௌரவம் என்பதெல்லாம்.

இவை தவிர வேறு மனவலி கொள்ள ஆணைப் பெண் விடுவதில்லை. அதே போல வேறு உடல்வலி கொள்ள பெண்ணை ஆண் விடுவதில்லை.

இதுவே அற்புதமான ஆண் பெண் உறவுமுறை.

ஒரு பெண் ஆணுக்கு நிகராக மட்டுமல்ல அவனைவிடவும் அறிவு பெற்றிருப்பது சிறப்பு. ஆண் ஆலோசனை கேட்பதில் மிகவும் விருப்பம் உள்ளவன். அது அவன் மனைவியிடமிருந்து கிடைத்தால் அதைவிட பாக்கியம் வேறில்லை.

ஆனால், நான் இந்தியா, சவுதி அரேபியா, கனடா வரை கண்டதில், பெண் முழுநேர பணியில் வெளியில் செல்வது குடும்ப அமைப்பைச் சிதைக்கவே செய்கிறது. வீட்டின் முழுப்பொறுப்பும் இயல்பாகவே அவளுக்கு உண்டு. கணவன் பிள்ளைகள் உறவுகள் அனைவரையும் ஒன்று திரட்டி அரவணைப்பதில் அவளுக்கு நிகர் அவளே. இந்த நிலையில் அவள் பணிக்குச் செல்வது மேலும் சுமைகளால் அழுத்தப்படும் நிலையை உருவாக்குகிறது.

ஆண் சமையலில் உதவலாம், வீட்டு வேலைகளில் உதவலாம், ஆனால் குடும்பக் கட்டுக்கோப்பில் அவன் கோட்டைவிட்டுவிடுவான். அந்த அறிவு அவனுக்கு அவ்வளவாக கிடையாது. படைப்பின் மன இயல்புப்படி அதலானென்ன என்று கேட்பவனாகவும் அலட்சியம் கொண்டவனாகவும் கவனம் சிதறுபவனாகவுமே பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள்.

இதனால் பெண்கள் வேலைக்கே போகக்கூடாது என்று சொல்வது சரியில்லைதான். அவள் வேலைக்குச் செல்லும் அத்தனை தகுதிகளோடும் இருக்க வேண்டும். அவசியம் ஏற்படும்போது கணவனை வீட்டில் வைத்துவிட்டு அவளே பொருளீட்டுவதை ஏற்றுக்கொள்ளும் வலிமையோடு இருக்க வேண்டும். ஆனால் இயல்பில் பிள்ளைகல் வளர்ப்பே அவளுக்குப் பிரதானமாய் இருக்க வேண்டும்.

குழந்தைகள் 24 மணி நேரமும் தாயைத் தேடுபவர்கள். எழுபது வயது ஆனாலும் கூட தாயைத்தேடும் மனிதர்களாகத்தான் நம்மவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு பெண் பணியில் இருப்பதைவிட, கணவனுக்குச் சேவை செய்வதைவிட பிள்ளைகளுக்கு எல்லாமாய் இருப்பதையே பெரிதும் விரும்புகிறாள். பிள்ளைகள் ஓரளவு வளர்ந்தபின், பெண் பணிக்குச் செல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்றாலும் அப்போதும் பெண்ணின் குடும்பப் பொறுப்பு ஓய்வதில்லை.

பணிக்குச் செல்வதால் பெண்ணின் போராட்டம் அதிகரிக்கிறது என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை பணிக்குச் சென்றாவது மன ஆறுதல் கொள்ளலாமே ஒரு மாற்றம் கிடைக்குமே என்ற சில பெண்களின் அவலநிலை.

ஆகவே சூழலுக்கு ஏற்ப மனைவி பணிக்குப் போவது மாறுபடும். ஆனால் முதல் தேர்வு பணிக்குப் போகாதிருப்பதே! சில பெண்கள் விதிவிலக்கு.

நன்றி :http://anbudanbuhari.blogspot.comபெண்ணின் வலிமை

ஆண்களும் போகப் பொருள் தான்!



பெண்கள், ஆண்களின் போகப் பொருட்கள் என்று ஆண்வர்க்கத்தினர் நினைக்கின்றனர். இந்த நவீன காலத்தில் கூட இவ்வாறு நினைப்பவர்கள் உள்ளனர்.
    அந்த நினைப்பில் உண்மை இருப்பதை நாம் மறுக்க முடியாது. பெண்கள் ஆண்களின் உணர்வுகளுக்கு வடிகாலாகவும், ஆண்களுக்கு இன்பம் அளிப்பவர்களாகவும் உள்ளதைக் கண்கூடாக நாம் கண்டு வருகிறோம். இந்த வகையில் பெண்கள் ஆண்களின் போகப்பொருட்கள் என்று கூறுவது சரிதான். ஆனால் இது பாதி உண்மை தான். இன்னொரு பாதி உண்மையை ஆண்கள் புரிந்து கொள்ளவில்லை.
    பெண்கள் எப்படி ஆண்களின் போகப் பொருட்களாக உள்ளனரோ அது போல் ஆண்களும் பெண்களின் போகப் பொருட்களாக உள்ளனர் என்பதைத் தான் ஆண்வர்க்கம் புரிந்து கொள்ளவில்லை. அது தான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும்.
    'அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை' என்ற சிறிய சொற்றொடரில் இந்த உண்மையைத் திருக்குர்ஆன் புட்டுவைக்கிறது.
    ஒருவர் அணிந்து கொள்வதற்கு ஆடை எவ்வாறு ஒத்துழைக்கிறதோ அது போல் பெண்கள் இன்பம் அனுபவிக்க ஆண்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் ஒத்துழைக்க வேண்டும்.
    பெண்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லை. தனது வெறி அடங்கினால் போதும் என்று நினைக்கும் கணவனை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள். அவளுக்கும் உணர்வு இருக்கிறது. இச்சை இருக்கிறது என்பதை உணர்ந்து அவளது இச்சை அடங்கும் வகையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுபவன் தான் மனைவியால் நேசிக்கப்படுவான்.
    இல்லற வாழ்வில் மனைவியைத் திருப்தி செய்யும் கணவனின் எந்தக் குறையையும் மனைவி பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டாள்.
திருமணத்தின் பிரதான நோக்கமே உடற்பசியைப் போக்குவது தான். அந்தப் பசி இருசாராருக்கும் உண்டு. இருசாராரின் பசியும் அடங்க வேண்டும்.
    இந்த அடிப்படை உண்மையை நீண்ட காலமாக ஆண் வர்க்கம் ஒப்புக் கொள்ளக் கூடத் தயாராக இல்லை. பெண்களுக்கு ஆன்மா உண்டா என்ற சர்ச்சைகளெல்லாம் நடந்துள்ளன. இன்றைக்கு ஆண்கள் இதை ஒப்புக் கொண்டாலும் நடைமுறைப்படுத்துவதில்லை. மனைவியரின் உணர்ச்சியை மதிப்பதில்லை.
    மேற்கண்ட வசனம் இத்தகைய ஆண்களுக்குச் சிறந்த அறிவுரையைக் கூறுகிறது. மேலும் சில பெண்கள் கணவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க மறுக்கின்றனர். ஆண்களுக்கு தாம்பத்திய உறவு தேவைப்படும் நேரத்தில் மனைவியர் ஒத்துழைக்க மறுப்பது தான் பெரும்பாலான ஆண்கள் விபச்சாரத்தை நோக்கிச் செல்வதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.
    பகல் நேரமாக இருந்தாலும் முக்கிய அலுவலில் ஈடுபட்டிருந்தாலும் பெண்கள் கணவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அத்தகைய பெண்களுக்கும் இந்த வசனத்தில் நல்ல அறிவுரை இருக்கிறது.
    கணவன் அழைத்தால் அடுப்படியில் இருந்தாலும் மனைவி ஒத்துழைக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைப் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    இருவரும் இந்த அறிவுரையைப் புரிந்து கொண்டால் குடும்பத்தில் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படாது.
    இந்த வசனத்தை இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் போது இனிய இல்லறத்துக்குத் தேவையான மேலும் சில அறிவுரைகள் இதனுள் அடங்கியிருப்பதை உணரலாம்.
    உதாரணம் காட்டுவதற்கு உலகில் எத்தனையோ பொருட்கள் இருக்க தம்பதிகளுக்கு உதாரணமாக இறைவன் ஆடையைக் குறிப்பிடுகிறான். இது ஏன் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
    பல் வேறு நோக்கங்களுக்காக ஆடை அணியப்படுகிறது. அதில் பிரதான நோக்கம் மானத்தை மறைப்பது.
    ஆடை எவ்வாறு மானம் காக்கிறதோ அது போல் ஆண்கள் தம் மனைவியரின் மானம் காக்க வேண்டும். பெண்கள் தம் கணவர்களின் மானம் காக்க வேண்டும்.
    ஆண் தன்னைப் பூரணமாக மனைவியிடம் ஒப்படைக்கிறான். ஒரு பெண் தன்னைக் கணவரிடம் முழுமையாக ஒப்படைக்கிறாள். முழு நம்பிக்கையுடன் ஒருவர் மற்றவரிடம் தன்னை ஒப்படைத்துள்ளனர்.
    அந்த நிலையில் மனைவியுடன் உடலுறவு கொண்டபின் அவளது அங்கங்கள் மற்றும் உணர்ச்சிகள் குறித்து நண்பர்களுடன் கருத்துப் பரிமாரிக் கொள்ளும் மானம் கெட்டதுகளும் ஆண்களில் உள்ளனர்.
    அது போல் கணவனின் அந்தரங்கத்தைத் தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளும் மானம் கெட்ட பெண்களும் உள்ளனர்.
    இத்தகையோரை மனிதர்களிலேயே மகா கெட்டவர்கள் என நபி (ஸல்) அவர்கள் இனம் காட்டியுள்ளனர்.
    மேற்கண்ட வசனத்தில் இத்தகையோருக்குச் சிறந்த அறிவுரை உள்ளது.
    உங்கள் கணவர்களிடம் - உங்கள் மனைவியரிடம் - உள்ள அந்தரங்க விஷயங்களை அடுத்தவரிடமிருந்து மறைக்கும் ஆடையாக ஒருவருக்கொருவர் திகழ வேண்டும்.
    வெயில் மழை குளிர் போன்ற தொல்லைகளிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் ஆடை அணியப்படுகிறது.
    மனைவிக்கு ஏற்படக்கூடிய துன்பம், மனக்கவலை, சிரமம் ஆகியவற்றில் கணவன் பங்கெடுத்து அதை நிக்கப்பாடுபட வேண்டும். அதுபோல கணவனுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டம், சிரமம் ஆகியவற்றை நிக்குவதற்கு மனைவி ஒத்துழைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆடையாகத் திகழ வேண்டும் என்பதில் இந்தக் கருத்தும் அடங்கியுள்ளது.
    ஆடை அணிவது ஒரு மனிதனின் மதிப்பை உயர்த்திக் காட்டுகிறது. அணிந்திருக்கும் ஆடையை வைத்தே மனிதன் மதிக்கப்படுகிறான். மதிக்கப்படுவதற்கேற்ப தனக்குப் பிடித்த ஆடைகளையே மனிதன் தேர்வு செய்கிறான்.
    அதுபோல் தான், ஆண்கள் தம் துணைவியரைத் தேர்வு செய்யவும். பெண்கள் தம் துணைவர்களைத் தேர்வு செய்யவும் உரிமை இருக்க வேண்டும்.
    அந்த உரிமையைப் பெண்களுக்கு வழங்க பெற்றோர் மறுக்கின்றனர்.
    எந்த மாதிரியான உடை தன் மகளுக்குப் பிடிக்கிறது என்று மகளிடம் கேட்கக் கூடிய பெற்றோர், காலமெல்லாம் அவளுக்குத் துணையாக இருக்கக் கூடிய கணவன் குறித்து எந்த அபிப்பிராயத்தையும் கேட்பதில்லை.
    பெண்ணின் சம்மதம் பெறாமல் நடத்தப்படும் திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்து காட்டியுள்ளனர். பெண்ணின் சம்மதத்தைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுத்தியுள்ளனர்.
    குடும்ப வாழ்வுக்கு ஆடையை உவமானமாகக் கூறியிருப்பதிலிருந்து இந்த உண்மையையும் நாம் உணர முடியும்.
    அணிகின்ற காரணத்தினால் ஆடைகள் அழுக்கடையும். அழுக்கடைந்த ஆடைகளை யாரும் அணிந்து கொண்டே இருப்பதில்லை. அதைத் துவைத்து தூய்மைப்படுத்தி அணிந்து கொள்கின்றனர்.
    புத்தாடை ஆரம்பத்தில் நம்மைக் கவர்வது போல் புதுமணத்தம்பதிகள் ஒருவர் மற்றவரைக் கவர்வார்கள். நாளடைவில் குற்றம் குறைகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.
    அவ்வாறு குற்றம் குறைகள் தென்படுமானால் ஒருவரிடமிருந்து மற்றவர் அதை நீக்க முயல வேண்டும். அதே நேரத்தில் அழுக்கை நீக்குகிறோம் என்ற பெயரில் ஆடையையே கிழித்து விடக்கூடாது. அந்த அறிவுரையும் இந்த சொற்றொடரில் அடங்கியுள்ளது.
    ஆண்கள் குடிகாரர்களாக இருந்தாலும், கொலைகாரன் என்றாலும் உழைக்காத சோம்பேறி என்றாலும் பெரிய வியாதிக்காரன் என்றாலும் ஆண்மையே இல்லாதவன் என்றாலும் அவனை மணந்து கொண்டவள் அதைச் சகித்துக் கொள்ள வேண்டும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றெல்லாம் பெண்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது.
    அந்த அறிவுரையை இவ்வசனம் அடியோடு நிராகரிக்கிறது.
    எந்த நோக்கத்திற்காக ஆடை அணிகிறோமோ அந்த நோக்கத்தை ஆடை நிறைவேற்றாவிட்டால் அதைத் தூக்கி எறிந்து விட்டு வேறு ஆடையை மாற்றிக் கொள்கிறோம்.
    கணவன் மனைவியிடம் கணவனாக நடக்காவிட்டாலும், அல்லது மனைவி கணவனிடம் மனைவியாக நடக்காவிட்டாலும் அவர்கள் அந்த உறவை முறித்து விட்டு ஏற்றதொரு துணையைத் தேடிக் கொள்ளலாம்.
    இல்லற வாழ்வில் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. அந்தக் கடமைகளை யார் நிறைவேற்றத் தவறினாலும் உறவை முறித்துக் கொள்ள அனுமதியளிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
    அவர்கள் உங்களுக்கு ஆடை! நீங்கள் அவர்களுக்கு ஆடை! என்பதைச் சிந்திக்கும் போது இதை உணர முடியும்.
    மறுமணம் செய்யாத பெண் ஆடையற்றவளாக நிர்வாணமானவளாக இருக்கிறாள் என்பதையும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது. விதவைகளுக்கும் விவாகரத்துச் செய்யப்பட்டவளுக்கும் வாழ்க்கை அவசியம் என்பதை வற்புறுத்துகிறது.
    இவ்வசனத்தை இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் இனிய இல்லறத்துக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளும் அமைந்திருப்பதை உணரமுடியும்.

 நன்றி இஸ்லாம் தளம்
Source : http://www.islamiyadawa.com/thafsir/2_187.htm

Friday, November 19, 2010

மனம் மகிழுங்கள்! அத்தியாயம் - 23 : மன ஒத்திகை

ற்பனை செய்ய ஆரம்பிச்சாச்சு - அடுத்து?

கற்பனைகளை நம் செயல்பாடுகளின் முன்னேற்றத்திற்கு எப்படி உபயோகிப்பது?

ரீடர்ஸ் டைஜஸ்டை (Reader’s Digest) அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆங்கிலப் பத்திரிகை. பத்திரிகை நடத்துபவர்களுக்கென்று அசாத்திய கற்பனைத் திறன் இருக்க வேண்டும். புதுசு புதுசாய் யோசிக்க வேண்டும். அப்பொழுதுதான் வாசகரைக் கவர, தக்க வைத்துக் கொள்ள முடியும்; இல்லையா? எனவே யோசித்தார்கள். பத்திரிகையின் சார்பில் ஆய்வொன்று செய்வது என்று முடிவு செய்தார்கள். எதைப் பற்றி? மன ஒத்திகையைப் பற்றி!

ஒரு பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிட்ட சில மாணவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அந்த மாணவர்களை மூன்று அணிகளாகப் பிரித்துக் கொண்டு முதல் அணி ஒரு மாத காலத்திற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் கூடைப்பந்தைக் கூடையினுள் வீசும் பயிற்சியை மேற்கொள்ளச் செய்தார்கள். அடுத்த அணிக்கு எந்தப் பயிற்சியும் கிடையாது. சும்மா இருக்க வேண்டும். மூன்றாவது அணி பந்து வீசும் பயிற்சியைத் தினமும் ஒரு மணி நேரம் மனதில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

ஆய்வின் முடிவில் தினமும் பந்து வீசிப் பயிற்சி பெற்ற அணியின் திறமை சராசரியாக இரண்டு சதவிகிதம் உயர்ந்திருந்தது. வெறுமே இருந்த அணியின் திறமை இரண்டு சதவிகிதம் மட்டுப்பட்டிருந்தது. மனதளவில் தினமும் பயிற்சி பெற்றதே மூன்றாவது அணி, அவர்களின் திறமை மூன்றரை சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆச்சரியமாயில்லை? செய்முறைப் பயிற்சியைவிட மனப் பயிற்சிக்கு அதிக மகத்துவம் உள்ளது என்று முடிவுரை வாசித்தது அந்த ஆய்வு!

யதார்த்தம் என்னவென்றால் நாம் இதெல்லாம் அறியாமலேயே நமது வாழ்க்கையில் தன்னிச்சையாக மனப் பயிற்சி மேற்கொள்ளத்தான் செய்கிறோம். அலுவலகத்திற்குச் செல்ல மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன்னமேயே எந்தச் சாலை வழியே போகப் போகிறோம், மீட்டிங்கிற்குத் தாமதமாகி விட்டதே அதனால் எவ்வளவு விரைவாக ஓட்டப் போகிறோம், என்பதைப் போன்ற சிறிய ஒத்திகைகள் மனதளவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதை நம் மனம் உணர்வதில்லை.

ஆனால் சில சமயங்களில் மட்டும் நீங்கள் உணரக்கூடும். எப்பொழுது? மனைவியிடம் பொய் சொல்லும்போது!

லேட்டாக வீட்டிற்குத் திரும்ப நேர்ந்தாலோ, மனைவிக்குத் தெரியாமல் நண்பருடன் சினிமா அது இது என்று சுற்றிவிட்டு வந்தாலோ, நுழைந்ததுமே “ஏன் லேட்டு?” என்று ஆரம்பித்து, போலீஸ் விசாரணையாய் வந்து விழப் போகும் கேள்விகளை என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று மனதில் ஓர் ஒத்திகை ஓடுமே, கவனித்ததில்லை?

நாம் அனைவரும் அறிந்த கிரிக்கெட் விளையாட்டு உதாரணமொன்றைப் பார்ப்போம். சுழன்று வரும் பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்று உங்கள் மூளையிலுள்ள செல்கள் கட்டளையிடுகின்றன. கம்ப்யூட்டர் ப்ரோகிராம் போல் வருகிறது கட்டளை. உங்கள் உடல் அதற்கேற்ப அந்தக் கட்டளைகளை நிறைவேற்றுகிறது. உங்கள் மனதிலுள்ளது நல்ல ப்ரோகிராம் என்றால் நீங்கள் நல்ல ஆட்டக்காரர். பந்து பவுண்டரி கோட்டைத் தொட்டிருக்கும். “என்னால் இந்த ஸ்பின்னையெல்லாம் தாங்க முடியாது”, என்று மனதில் கற்பனையிருந்தால் ஒன்றிரண்டு ஸ்டம்புகள் காலி! தினசரி இந்த விளையாட்டிற்கானப் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளும்போது, சந்தேகமேயின்றி உங்களின் திறமை மேம்படும். நிச்சயம் மேம்படும். ஆனால், உடல்ரீதியான பயிற்சி மட்டுமே போதும், என்று நீங்கள் நினைத்தால், “போதாது” என்கிறார்கள் மன ஆய்வாளர்கள்.

நாள்தோறும் உடல்ரீதியான பயிற்சியை மேற்கொள்வதுடன் சேர்த்து மனப் பயிற்சியையும் சரியான முறையில் செய்தால் விரைவாகம் சிறப்பாகவும் திறமையை மேம்படுத்த முடியும் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறார்கள். ஒரு காரியத்தைச் செய்வதுபோல் நீங்கள் கற்பனை செய்யும்போது அதை உண்மையிலேயே நிகழ்த்துவதைப் போல் உங்கள் மனதிலுள்ள ப்ரோகிராம்களை நீங்கள் வடிவமைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் மூளையிலுள்ள செல்களில் ரசாயண மின்மாற்றம் நிகழ்கிறது. அவை உங்கள் மனதில் புதிய மாற்றத்தைத் தோற்றுவிக்கிறது. மனம் உங்களுக்கு ஆற்றும் மாபெரும் உதவி அது என்பது அவர்களது வாதம்.

நேர்முகத் தேர்விற்குத் தயாராகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கூகுளிலில் ஆரம்பித்துப் பல புத்தகங்கள் வரை பிரித்து மேய்ந்தாச்சு! அந்த ஹோம்வொர்க் மட்டும் போதுமென்றா இண்டர்வியூவிற்குச் செல்வீர்கள்? அவர்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு எப்படியெல்லாம் பதில் அளிக்க வேண்டும், அல்லது எப்படி பதில் அளிக்கக் கூடாது, எவ்விதம் அமர வேண்டும், என்ன சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளாடை முதற்கொண்டு ஒரு மன ஒத்திகை நிகழ்ந்திருக்குமில்லையா? இவ்விதம் நாம் தன்னிச்சையாய் மேற்கொள்ளும் இந்த மன ஒத்திகையை முறைப்படுத்தி, வளப்படுத்தி செய்முறைப் பயிற்சியுடன் சரியானபடி ஜோடி சேர்த்தால் நம் ஆற்றலை எளிதாய், முழுமையாய் வெளிக்கொணரலாம்.

மன ஒத்திகைகளின் மூலம் நிறைவான செயற்பாட்டிற்கு உண்டான வகையில் நாம் நமது மனதை வடிவமைக்க முடியும். மனதில் நிகழும் அத்தகு ஒத்திகைக் கற்பனைகளில நாம் தவறிழைக்கப் போவதில்லை. எனவே மனம் சரியான செயற்பாட்டிற்குத் தயாராகிறது.

அதேபோல் மனதில் தப்புத் தப்பாய்க் கற்பனை செய்து ஒத்திகை பார்த்தால் நிகழ்வும் அப்படியே அமையும். இதைத்தான் பயந்தது போலவே நடந்துவிட்டது என்கிறோம். எனவே தப்புக் கற்பனை தப்பு. அதைத்தவிர்க்க வேண்டும்.

ஆக, இதனலாலெல்லாம் நாம் அறிய வேண்டியது யாதெனில்,

மனதில் கற்பனை ஒத்திகைகள் நிகழ்த்தி அதன்மூலம் நமது திறமைகளைத் தூய்மையாக்கும் முயற்சியை நாம் ஆரம்பிக்க வேண்டும். பரிட்சைக்குத் தயாராவது, இண்டர்வியூ, புதிதாய் மேடையில் பேசவிருப்பது, திருமணமாகி முதன் முதலாய் மனைவியிடம் பேசப் போவது என்று எதுவாக இருந்தாலும் முற்கூட்டியே நேரம் செலவழித்து மனதில் ஒத்தகை நிகழ்த்திவிடுங்கள். நடப்பவை நலமே நிகழும்.


னம் மகிழ, தொடருவோம்...

Thursday, November 18, 2010

அறிவுரை எப்படி இருக்க வேண்டும் !




அறிவுரை எப்படி இருக்க வேண்டும் ! உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது அறிவுரை. இது நன்மை பயக்குமா! அல்லது பாதிப்பினை உண்ட்டாக்குமா. இது கேட்காமலும்   கிடைக்கும். அறிவுரை ஆலோசனையாக மாறும்சொல்லும்  நன்மை தரலாம்.அறிவுரை கலந்துரையாடலாக இருந்தால் நல்லது, நமது மகனாக இருந்தாலும் மற்றவர் இருக்கும்பொழுது சொல்வது உறவினை பாதிக்கும் .
 
ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் உடல்நலன் மற்றும் டயட் (எடை குறைப்பு) சம்பந்தமாக ஆண்கள் சொல்லும் அறிவுரைகள் பெண்களிடம் எப்பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு அற்புதமாக அறிவுரை சொல்லும்  நாம் அதன்படி நடப்பதில்லை.

 அறிவுரையாக ஒருவரிடம் நாம் சொல்லும் போது   கேட்பவர் இப்படியும் நினைக்கலாம் .
இவரிடம் இதனை யார் கேட்டார்கள் ,பரப்புவதற்கு ஒரு செய்தி கிடைத்துவிட்டது அல்லது இவரை கண்டால் நாம் ஓடி விட வேண்டியதுதான் .
அறிவுரை சொல்வது சிலருக்கு வியாதியாக மாறிவிடும்.யாருக்காவது அதனை சொல்லாமல் விடமாட்டார் .ஐயோ பாவம் என்று கேட்டு விடுவர் சிலர்.
குடும்பத்தில் உள்ள வயதான பெரியவர்கள் தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அறிவுரை சொல்வது எல்லோருக்கும் பிடிக்காமல் போகின்றது அதனால் அவர்களை (பெற்றோரை) முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விடும் பரிதாப நிலை ஏற்படுகின்றது .
குழந்தைகளை நல்லவிதமாக வளரவேண்டுமானால் அவர்களுக்கு முன் மாதிரியாக முதலில் நீங்கள் நல்லவர்களாக வாழுங்கள், அவர்களுக்குரிய நேரத்தை அவர்களுக்கு வழங்குங்கள். நேரமின்மை காரணமாக அவர்களை குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பினால் நாளை அவர்கள் அதே காரணத்திற்காக உங்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பலாம்.

காலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும் நற்செயல்கள் புரிந்து கொண்டும் மேலும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைபிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! (103:1-3)
அறிவுரை சொல்லலாமா!

நம்மை சுற்றிலும் ...